ஆப்நகரம்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு: தமிழக அரசுக்கு கனிமொழி வரவேற்பு

லட்சக்கணக்கானோர் நம்பியுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வில் இனி முறைகேடு நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்

Samayam Tamil 24 Jan 2020, 6:27 pm
சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை வரவேற்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil கனிமொழி
கனிமொழி


தமிழகம் முழுவதும் குரூப் 4 பதவிகளுக்கான பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் அடங்கிய தரவரிசை பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்டது. அதில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கீழக்கரை பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட இரண்டு தேர்வு மையங்களில் தேர்வெழுதியவர்களில் மாநில அளவில் 40 பேர் முதல் 100 இடங்களில் முன்னிலை வகித்தனர்.

இடஒதுக்கீடு ரீதியாக முன்னிலை பெற்றவர்களும் இந்த தேர்வு மையங்களில் தேர்வெழுதியவர்களாகவே இருந்தனர். வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதி முன்னிலை வகித்தது பிற தேர்வர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது சந்தேகத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை கண்டித்து பாமக போராட்டம் அறிவிப்பு

இதையடுத்து, சம்பந்தப்பட்ட 40 பேரிடமும் தேர்வாணையம் கடந்த 13ஆம் தேதி விசாரணை நடத்தியது. தொடர்ந்து, சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள், பள்ளிகள், பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட ராமேஸ்வரம் பகுதியில் உள்ள தேர்வு மையங்களை ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது. அத்துடன் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதகவும் தகவல் வெளியானது.

இதுதொடர்பாக தேர்வாணையம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார் முதற்கட்டமாக ராமேஸ்வரம், கீழக்கரை வட்டாட்சியர்கள் இருவரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, தேர்வு மைய அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேரிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசர், முறைகேடு தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர்.

சசிகலா எப்போது சிறையில் இருந்து வருவார்? டிடிவி தினகரன் பதில்

இதனிடையே, முறைகேடு குற்றச்சட்டுக்கு ஆளான 99 தேர்வர்களை தகுதிநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்ட டிஎன்பிஎஸ்சி, இந்த 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு பதில் தகுதியான 39 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் துணையுடன் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், முறைகேடு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

பெரியார் சிலை உடைப்பு: ரஜினிகாந்த் சர்ச்சை பேச்சு எதிரொலியா?

இந்நிலையில், குரூப் 4 தேர்வு முறைகேடு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை வரவேற்றுள்ள திமுக எம்.பி. கனிமொழி, லட்சக்கணக்கானோர் நம்பியுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வில் இனி முறைகேடு நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி