ஆப்நகரம்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு... ரூ.4 கோடிக்கு 23 அரசு வேலைகள்; சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்!

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 9 Feb 2020, 5:35 pm
சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.4 கோடிக்கு 23 அரசு வேலைகளை அவர் விற்றது அம்பலமாகியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகம் முழுவதும் குரூப் 4 பதவிகளுக்கான பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து, தேர்வாணையம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார், முறைகேடு தொடர்பாக அரசு ஊழியர்கள், இடைத்தரகர்கள், தேர்வர்கள் என இதுவரை 12 பேரை கைது செய்துள்ளனர். இதனிடையே, 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டி.என்.பி.எஸ்.சி. விவகாரம்: சிறப்பு விசாரணைக்குழு அமைக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு

முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நபர்கள் அனைவரும் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் எனவும், சில மணி நேரங்களிலேயே அழியும் தன்மை கொண்ட பேனா மூலம் அவர்கள் தேர்வெழுதி, அதன் பின்னர் இடைத்தரகர்கள் உள்ளிட்டவர்களுடன் துனையுடன் விடைத்தாள்களை கொண்டு செல்லும் வழியில் வினாக்களுக்கு பதிலளித்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதனிடையே, டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அதேசமயம், மற்றொரு முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவரும், இடைத்தரகராக செயல்பட்டவருமான ஜெயக்குமார் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

காவலர் தேர்விலும் முறைகேடு... என்ன நடக்கிறது தமிழகத்தில்

இதையடுத்து, நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமாரிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், ரூ.4 கோடிக்கு 23 அரசு வேலைகளை அவர் விற்றது அம்பலமாகியுள்ளது. தேர்வர்களிடம் பணம் பெற்று முறைகேடுக்கு உதவியவர்களுக்கு ஜெயக்குமார் பங்கிட்டு கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு எதிரொலி: தேர்வுகளில் முக்கிய மாற்றங்கள் செய்து அதிரடி அறிவிப்பு

விடைத்தாள்களை திருத்தியது, விடைத்தாள்களை கொண்டு சென்ற வாகனத்தை நிறுத்திய இடம் உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் ஜெயக்குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இந்த முறைகேடுகளின் முக்கிய புள்ளி யார் என்ற கோணத்திலும் போலீசாரின் விசாரணை தொடர்கிறது.

அடுத்த செய்தி