ஆப்நகரம்

’தமிழ்நாடு இன்று’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!

அரசியல் அதிரடிகள், கொரோனா வைரஸ் பாதிப்பு, புரட்டி எடுக்கும் பருவமழை என பல்வேறு விஷயங்கள் தமிழகத்தில் முக்கியச் செய்திகளாக இருந்து வருகின்றன. இவற்றை அறிந்து கொள்ள “சமயம் தமிழ்” உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்...

Samayam Tamil 26 Jul 2020, 1:18 pm
அதிமுகவில் அதிரடியான மாற்றங்கள், அதிகரித்து வரும் கொரோனா தொற்று, முழு ஊரடங்கு அமல், பரவலாக பெய்து வரும் மழை உள்ளிட்டவை தமிழகத்தின் முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோல் மேலும் பல செய்திகளை இங்கே காணலாம்.
Samayam Tamil Tamil Nadu Breaking News


தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:

* நடிகை வனிதா அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட சூர்யா தேவி மற்றும் அவரைக் கைது செய்த பெண் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த சூழலில் சூர்யாதேவி எங்கே என்று தெரியவில்லை என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. சூர்யாதேவி கைதானபோது நடிகை வனிதா மற்றும் பல காவலர்கள் காவல்நிலையத்தில் உடனிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

* தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நாளை முதல் இலவச முகக்கவசம் விநியோகம் செய்யும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

* சாத்தான்குளத்தில் தந்தை - மகன் வழக்கை விசாரித்து வரும் மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு ஏற்கனவே வைரஸ் பாதிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் அதிரடி - புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் யார் யார்?

* தமிழகத்தில் வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைகிறது. இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா அல்லது தளர்வுகள் வழங்குவதா என்பது குறித்து வரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.

* தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. மாணவர்கள் பெற்றோர்களுடன் வந்து மதிப்பெண் மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.

* நீலகிரி மாவட்டம் தங்காடு ஒரநள்ளி கிராமத்தில் நடைபெற்ற திருமணத்தில் கோவையில் இருந்து 60 வயது மூதாட்டி கலந்து கொண்டார். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இவர் மூலமாக திருமணத்தில் கலந்து கொண்ட 200 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* ஐ.நா தலைமையகத்தில் நடந்த மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மதுரையைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளர் மோகனின் மகள் நேத்ரா உரையாற்றினார். அதாவது “பாலின சமத்துவத்தை உணர செய்தல் மற்றும் அனைத்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அதிகாரம் பெறுதல்” என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது.

மீண்டும் வெடித்த போயஸ் கார்டன் சர்ச்சை - பரபரப்பு ஆடியோ வெளியிட்ட ஜெ.தீபா!

* கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. கடைகள், அலுவலகங்கள் எதுவும் இயங்காது. பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* அதிமுகவில் புதிதாக கொள்கை பரப்புச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி