ஆப்நகரம்

’இன்றைய தமிழகம்’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பரபரப்பான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதனால் முக்கியச் செய்திகளுக்கு பஞ்சமில்லை. இன்றைய நாளின் பல்வேறு செய்திகளை இங்கே சுருக்கமாக காணலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் “சமயம் தமிழ்” உடன்...

Samayam Tamil 8 Jul 2020, 1:14 pm
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு, மத்தியக் குழு வருகை, சாத்தான்குளம் விவகாரம், 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு விசாரணை, ஊரடங்கின் விளைவுகள் உள்ளிட்டவை தமிழகத்தின் முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல் மேலும் பல செய்திகளை இங்கே காணலாம்.
Samayam Tamil 11 MLAs disqualification Case


தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:

* தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கடலூர், நாகப்பட்டினம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

* தமிழகத்தில் வரும் ஜூலை 13ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

* மதுரை மாவட்டத்தில் மேலும் 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 5,000ஐ தாண்டியது.

* சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 71,230 பேரில் 22,374 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர்; அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,569 பேர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

* சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை விவகாரத்தில் மேலும் 5 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியிலி இருந்த எஸ்.எஸ்.ஐ. பால்துரை உள்ளிட்ட ஐவர் அடங்குவர். ஏற்கனவே காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்பட 5 பேர் கைதாகி சிறையில் உள்ளனர்.

* தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளத்தில் 50% குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு சூழல் சீரான பிறகு பழைய முறையில் சம்பளம் வழங்கப்படும் - திரைப்பட தயாரிப்பாளர்கள்

* சென்னையில் சொத்து வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2020-21ஆம் ஆண்டிற்காக சொத்து வரி செலுத்த கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் கால அவகாசம் நிறைவு பெற்றது.

* ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி