ஆப்நகரம்

தமிழகத்தை கடக்கும் புரேவி புயல்: இங்கெல்லாம் சுற்றுலா போக முடியாது!

புயல் எச்சரிக்கை காரணமாக சுற்றுலா தலங்கள் செல்வதற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 3 Dec 2020, 10:50 am
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. இங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் படையெடுத்துச் செல்வர். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. ஐந்து மாதங்களுக்கு பிறகு இ-பாஸ் பெற்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ்கார்டன் உள்ளிட்ட தலங்கள் திறக்கப்பட்டன. இந்த சூழலில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
Samayam Tamil Kodaikanal Tourism Ban


இதனை ஏற்றுக் கொண்டு கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறையை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டார். கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் மோயர்பாய்ண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், தூண் பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஏரியில் படகு சவாரியும் தொடங்கியது.

இந்நிலையில் புரேவி புயல் காரணமாக தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் மன்னார் வளைகுடா பகுதியை கடந்து இன்று (நவம்பர் 3) தமிழக கடலோரப் பகுதிகளை புயல் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தற்போது பாம்பனில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் புரேவி புயல் மையம் கொண்டுள்ளது.

புரேவி புயல் எச்சரிக்கை; அனைவருக்கும் விடுமுறை அறிவிப்பு!

மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம்பன் - கன்னியாகுமரி இடையே நாளை அதிகாலைக்குள் மீண்டும் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் தாக்கம் காரணமாக நாகை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த சூழலில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கன மழையால் மரங்கள் முறிந்து விழும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு யாரும் வர வேண்டாம் என்று வனத்துறை தடை விதித்துள்ளது.

அடுத்த செய்தி