ஆப்நகரம்

திடீரென 100மீ உள்வாங்கியது கடல்; ராமேஸ்வரத்தில் அதிர்ச்சியாகி ஓடிவந்த சுற்றுலா பயணிகள்!

ராமேஸ்வரம் பகுதியில் கடல் திடீரென உள்வாங்கியதால், அதைக் கண்ட சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Samayam Tamil 10 Jun 2019, 6:03 pm
தமிழ்நாட்டில் கோடை வெயில் மெல்ல தணிந்து வருகிறது. பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil Sea Water


குறிப்பாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 2 நாட்களாக சூறைக் காற்று வீசி வருகிறது. தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் காணப்படுகிறது. பாம்பன் பகுதியில் வீசி வரும் பலத்த காற்றால், அப்பகுதியில் உள்ள தானியங்கி சிக்னலில் சிக்னல் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட விரைவு ரயில், நீண்ட நேரம் பாதி வழியில் நின்று கொண்டிருந்தது. சாலைகளிலும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடலில் அலைகள் அதிக உயரம் எழும்பி வருகின்றன.

இதனால் சுற்றுலா பயணிகளுக்கு கடலோர காவல்படை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக விடுமுறை என்பதால், ராமேஸ்வரம் பகுதியில் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் சங்குமால், ஓலைக்குடா, அக்னிதீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கடல் 100 மீ உள்வாங்கியது. இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, ஓடி வந்தனர்.

கடல் உள்வாங்கியதால் பவளப்பாறைகள், நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள் உள்ளிட்டவை வெளியே தெரிந்தன. சிறிது நேரத்தில் கடல் பழைய நிலைக்கு வந்ததால், சுற்றுலா பயணிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

அடுத்த செய்தி