ஆப்நகரம்

4 ஆண்டுகளாக சாலைகளை சீரமைக்காததைக் கண்டித்து மரங்களை நடும் போராட்டம்!

பாதாள சாக்கடை திட்ட பணிக்காக வெட்டப்பட்ட சாலைகளை கடந்த 4 ஆண்டுகளாக சீரமைக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையின் நடுவே மரங்களை நடும் போராட்டத்தில் பொது மக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 3 Jan 2019, 9:58 pm
சேலம் மாநகரின் முக்கிய பகுதியாக உள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்காவிட்டால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Samayam Tamil tree planting protest


சேலம் மாநகராட்சி 30 வது கோட்டத்திற்குட்பட்ட செவ்வாய்பேட்டை அப்புசாமி செட்டி தெரு, மஜீத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிக்காக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சாலைகள் தோண்டப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதன் பின்னர், சாலையை சீரமைக்காமல் இருப்பதால், சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதோடு, சாலையை பொது மக்கள் பயன்படுத்திட முடியாத நிலையில் உள்ளது. சேலம் மாநகரின் முக்கிய பகுதியாகவும், வணிக நிறுவனங்கள் குறிப்பாக வெள்ளி கொலுசு உற்பத்தி செய்பவர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் இந்த சாலை இது போன்ற அவலமாக இருப்பதை சரி செய்திட வலியுறுத்தி, அப்பகுதி மக்களும், வணிகர்களும், பல்வேறு அமைப்பினரும் சேலம் மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்து உள்ளனர். ஆனால் இது குறித்து அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.

மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து அப்பகுதி மக்கள் செவ்வாய்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பொது மக்கள் பயன்படுத்திட முடியாத நிலையில் இருப்பதை எடுத்துரைக்கும் வகையில், சாலையில், மரங்களை நட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடாமல், காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள், எழுத்து பூர்வமாக சாலையை சீரமைத்து தருவதாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக கூறினர். இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்

அடுத்த செய்தி