ஆப்நகரம்

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அடுத்த அடி... திமுக செஞ்ச அதிரடி சம்பவம்!

ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்க திருச்சி திமுக மேயர் செல்லாதது அடுத்த பரபரப்பை கொளுத்தி போட்டுள்ளது.

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 12 Jan 2023, 6:51 am
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மையமாக வைத்து அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தனது உரையில் இடம்பெற்றிருந்த பல விஷயங்களை வாசிக்காமல் தவிர்த்து ஆளுங்கட்சியின் கோபத்திற்கு ஆளானார் ஆளுநர். அவர் இருக்கும் போதே முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.
Samayam Tamil trichy and thanjavur dmk mayor not welcome governor rn ravi due to political clash
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அடுத்த அடி... திமுக செஞ்ச அதிரடி சம்பவம்!


ஆளுநர் உரை

இதுபற்றி அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஆளுநர், அடுத்த விநாடியே வெளியே கிளம்பிவிட்டார். ஆனால் தேசிய கீதம் ஒலிக்கப்படுவதற்கு முன் சென்றது பெரும் சர்ச்சையானது. அதுமட்டுமின்றி உரையை மாற்றி வாசித்த ஆளுநர், அவர் இருக்கும் போதே தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் என தமிழக சட்டப்பேரவை இதுவரை காணாத பரபரப்பான நிகழ்வுகளை சந்தித்தது. இத்துடன் விஷயம் முடியவில்லை.

தஞ்சை புறப்பட்ட ஆளுநர்

அடுத்தகட்டமாக ஆளுநர் மாளிகை முற்றுகை என அரசியல் கட்சிகள் கையிலெடுக்க, பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்கள் என பல்வேறு தரப்பினரும் களமிறங்கியுள்ளனர். இந்த சூழலில் தான் திருச்சி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்க திமுக மேயர் அன்பழகன் வரவில்லை என்ற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. தஞ்சாவூரில் தொழில் முனைவோர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.


ஸ்டாலின் போட்ட கண்டிஷன்... ஆளுநர் விஷயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கப்சிப்!

திருச்சியில் வரவேற்பு

இதில் பங்கேற்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செல்கிறார். அதுமட்டுமின்றி திருவையாறில் இன்று நடைபெறும் தியாகராஜா ஆராதனை விழாவிலும் பங்கேற்கிறார். இதையொட்டி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை 5.45 மணியளவில் ஆளுநர் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவரை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

திமுக ஆளுநர் வரவில்லை

வழக்கமாக ஆளுநர் ஒரு நகருக்கு செல்லும் போது மேயர் சென்று வரவேற்பார். கடந்த ஆண்டில் கூட திருச்சி வந்த போது திமுக மேயர் நேரில் சென்று வரவேற்ற நிகழ்வுகளை பார்க்க முடிந்தது. தற்போது ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் இடையில் பனிப்போர் மூண்டுள்ளதால் ஆளுநரை கண்டு கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து விமான நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்து, பின்னர் காரில் தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார்.

வழி நெடுகிலும் பாதுகாப்பு

முன்னதாக திருச்சி வரும் ஆளுநருக்கு தமிழ் அமைப்புகள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதையொட்டி திருச்சி விமான நிலையத்தை சுற்றிலும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் விமான நிலையத்திலிருந்து இருந்து தஞ்சாவூர் வரை வழி நெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


’பிரதேசம்’ மறந்து போச்சா? இது எங்க ’தமிழ்நாடு’... ஆளுநருக்கு எதிராக கோவையில் போராட்டம்!

தஞ்சை மேயரும் ஆப்சென்ட்

இதையடுத்து தஞ்சாவூர் சென்றதும், அங்கும் ஆளுநரை வரவேற்க திமுக மேயர் வரவில்லை எனச் சொல்லப்படுகிறது. தஞ்சாவூரில் தற்போது திமுகவை சேர்ந்த ராமநாதன் மேயராக இருக்கிறார். திருச்சி, தஞ்சாவூர் என இரண்டு திமுக மேயர்களும் ஆளுநர் ஆர்.என்.ரவியை புறக்கணித்துள்ளனர். இதுதவிர தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் அழுத்தம் கொடுக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி