ஆப்நகரம்

அமமுகவின் பொதுச்செயலாளராகிறாா் டிடிவி தினகரன்

அமமுகவின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்க உள்ளதாகவும், இதற்காக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அவசரக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Samayam Tamil 19 Apr 2019, 12:43 pm
அமமுகவிற்கு பொதுவான சின்னம் வேண்டும் என்றால் உங்கள் கட்சியை பதிவு செய்ய வேண்டும் என்று தோ்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தொிவித்திருந்த நிலையில், தற்போது அமமுகவை பதிவு செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
Samayam Tamil TTV Dhinakaran 123


அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோா் நீக்கப்பட்டதைத் தொடா்ந்து நாங்கள் தான் உண்மையான கட்சி என்று டிடிவி தினகரன் உள்ளிட்டோா் செயல்பட்டு வந்தனா். சுயேட்சையாக ஆா்.கே.நகர் சட்டமன்ற தோ்தலில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து மக்களவைத் தோ்தலை மனதில் கொண்டு அமமுக என்ற அமைப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

மேலும் நாங்கள் அதிமுகவின் ஒரு அணி தான். தனி கட்சி கிடையாது. தற்போது நாங்கள் ஒரு அமைப்பாகவே செயல்பட்டு வருகிறோம். இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவை கைப்பற்றுவதே எங்கள் நோக்கம் என்று கூறி அமமுகவை தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யாமல் இருந்தனா். ஆனால் அமமுக பதிவு செய்யப்படாத அமைப்பு என்பதால் அதற்கு, பொதுவான சின்னம் வழங்க முடியாது என்று தோ்தல் ஆணையம் தொிவித்திருந்தது.

அதன் பின்னா் மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்தியே அமமுகவுக்கு பாிசுப் பெட்டி சின்னம் பெறப்பட்டது.

இந்நிலையில் வருகின்ற மே மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தோ்தல்களில் பொதுச் சின்னம் பெறவேண்டும் என்றால், அமமுகவை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அமமுகவை பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளாா். அதன்படி கட்சியை தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்வது என்றும், கட்சியின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவசர கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏற்கனவே இரட்டை இலை சின்னம், அதிமுகவுக்கு உரிமை கோரி நடைபெற்று வந்த வழக்கை சசிகலா தொடா்ந்து நடத்துவாா் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி