ஆப்நகரம்

சென்னை: லாரி - பைக் மோதி விபத்து, 25 வயது பெண் பலி!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் லாரி-பைக் மோதி விபத்துக்குள்ளானதில், 25 வயது பெண் லாரியின் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 Feb 2019, 1:40 am
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் லாரி-பைக் மோதி விபத்துக்குள்ளானதில், 25 வயது பெண் லாரியின் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil man dead


சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீரான் சாகீப் தெருவைச் சேர்ந்த தம்பதியினர் சரவணன் – சரஸ்வதி. இவர்களுக்கு ஆறு வயதிலும், மூன்று வயதிலும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மூத்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால்,சரவணன் தன் மனைவி குழந்தையோடு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வீட்டுக்கு சில மீட்டர் தொலைவில் வரும் போது சிந்தாதிரிப்பேட்டை மேம்பாலம் அருகே வேகமாக வந்த லாரி ஒன்று, இவர்கள் சென்ற பைக்கின் மீது மோதியது.

இந்த விபத்தில் சரஸ்வதி லாரியின் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். சரவணனும், அவரது குழந்தையும் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தனர். விபத்தை பார்த்த பொதுமக்கள் லாரி டிரைவரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அண்ணா சதுக்கம் போலீசார், சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சிறு காயங்களுடன் தப்பித்த சரவணனும் அவரது குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லகான் சிங் என்பதும் டெல்லியில் இருந்து மோட்டார் வாகன பொருட்களை லாரியில் ஏற்றி கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது. பொதுமக்கள் தாக்கியதில் படுகாயமடைந்த லாரி டிரைவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வீடருகே வரும் போது கணவர் கண்முன் இளம்பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி