ஆப்நகரம்

விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடலாம் என்று தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 24 Sep 2019, 11:06 am
தமிழகத்தில் காலியாக இருக்கும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது, விக்கிரவாண்டி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
Samayam Tamil UStalin


இந்த இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு தாக்கல் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. அதிமுகவில் இரண்டு தொகுதிகளுக்கும் நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தினர்.

வேட்பாளர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்று நேற்று முதல்வர் பழனிசாமி தெரிவித்து இருந்தார். இரண்டு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை.

திமுகவிலும் விருப்ப மனு தாக்கல் நடந்து வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் மகனும், அந்தக் கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இவர் சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான பொன்.கவுதம சிகாமணி, நேற்று அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார்.

குடும்ப சொத்தாகிறதா நாங்குநேரி தொகுதி?

தானாக கவுதம சிகாமணி இந்த விருப்பமனுவை தாக்கல் செய்து இருக்க மாட்டார். மேல்மட்டத்தில் இருந்து அதுபோல் செய்யும்மாறு அவருக்கு கட்டளை வந்து இருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது. அல்லது ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக இருந்து வரும் பொன்முடியின் மகன் உதயநிதிக்கு விசுவாசத்தை காட்டும் வகையில் விருப்ப மனு தாக்கல் செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு- ஜிகே வாசன்

இதற்கு முன்னதாக திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியிடலாம் என்று கூறப்பட்டு இருந்தது. அப்போது, உதயநிதி போட்டியிட வேண்டும் என்றும் திருவாரூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் நலக் கழகத்தின் தலைவர் எடிசனும் விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தார். ஆனால், உதயநிதிக்கு அப்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தற்போது கட்சியின் பொறுப்பில் இருப்பதால் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்த தொகுதியில் திமுக வெற்றி பெற்று இருந்ததால், உதயநிதி போட்டியிட்டால், வெற்றி பெறுவது உறுதி என்று கணக்கிடப்பட்டுள்ளது. அரசியலில் தனக்கு என்று அடையாளம் தேடிக் கொள்ள உதயநிதிக்கு இது நலல் வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் நாங்குநேரியில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் போட்டியிடலாம் என்று தெரிய வந்துள்ளது. இதற்கு முன்பு அந்த தொகுதியில் குமரி அனந்தனின் சகோதர் வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இந்தத் தொகுதி குமரி அனந்தன் கைக்கு செல்வது உறுதியாகியுள்ளது.

இந்த தொகுதியில் வாய்ப்பு கிடைத்தால் வெற்றி பெறுவது உறுதி என்றும் குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி