ஆப்நகரம்

உதயநிதி பதவியேற்பு: களத்தில் இறங்கிய துர்கா.. அமைச்சர்களுக்கு என்ன பதற்றம்?

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் கட்சி சார்பிலும் குடும்பம் சார்பிலும் ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 13 Dec 2022, 7:35 am
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நாளை பதவியேற்க உள்ள நிலையில் திமுக உடன்பிறப்புகள் அதை உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். டிசம்பர் 14 ஆம் தேதி ( புதன் கிழமை) காலை 9:30 மணிக்கு, தமிழக ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் பதவியேற்பு நடைபெற உள்ளது. உதயநிதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.
Samayam Tamil udhayanidhi durga stalin


திமுக 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போதே உதயநிதி அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்டாலின் சம்மதம் தெரிவிக்க தற்போது அவர் அமைச்சரவையில் இடம்பெற உள்ளார்.

அமைச்சர்கள் பலரும் வலியுறுத்தி வந்ததை போல் உதயநிதிக்கு பதவி வழங்கப்படுவது தங்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் இதை பயன்படுத்தி இலாக்கா மாற்றம், பதவி பறிப்பு போன்ற நடவடிக்கைகளை தலைமை எடுக்குமா என்ற பேச்சு அமைச்சரவை வட்டாரத்தில் நிலவுகிறது.
பத்திரப் பதிவு கட்டணம் உயராது: அமைச்சர் அளித்த உறுதி!
உதயநிதி ஸ்டாலினுக்கு மெய்யநாதனிடம் கூடுதலாக உள்ள விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன், முதல்வர் வசம் உள்ள சிறப்பு திட்ட செயலாக்கம், கீதா ஜீவன் வசம் கூடுதலாக உள்ள மகளிர் உரிமைத்துறை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க பெரிய கருப்பனிடம் உள்ள ஊரக வளர்ச்சித் துறையை ஐ.பெரியசாமிக்கும் அதற்கு பதிலாக அவரிடம் உள்ள கூட்டுறவுத் துறையை இவருக்கும் வழங்கப்பட உள்ளதாக சொல்கிறார்கள்.

வனத்துறை அமைச்சராக உள்ள ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத் துறையும், சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள மதிவேந்தனுக்கு வனத்துறையும் கொடுக்க ஏற்பாடுகள் நடப்பதாக சொல்கிறார்கள்.

சரி இந்த அமைச்சரவை மாற்றத்தை பயன்படுத்தி தங்களுக்கு வாய்ப்பு வழங்குவார்களா என்று எதிர்பார்த்திருந்த டெல்டா மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களான டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் கலைவாணன், துரை சந்திரசேகர், சேலம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

உதயநிதி அமைச்சராக உள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இரு அறைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனுக்கு தலைமை செயலகத்தில் உள்ள அறையை அமைச்சராகும் உதயநிதிக்கு ஒதுக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனவாம்.

தலைமை செயலகத்தில் 10 ஆவது கேட் நுழைவு வாயில் அருகே உள்ள அறையும், 2 ஆவது மாடியில் உள்ள ஒரு அறையும் முழு வீச்சில் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற போது கொரோனா நெருக்கடி காரணமாக பலரையும் அழைக்க முடியவில்லை என்ற வருத்தம் அவரது மனைவி துர்கா ஸ்டாலினுக்கு இருந்ததாம். அந்த குறையை உதயநிதி அமைச்சராக பதவியேற்கும் நிகழ்வில் போக்கிவிடலாம் என்று அழைப்பிதழ் கொடுக்க பெரிய லிஸ்டையே தயாரித்து வருவதாக சொல்கிறார்கள்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி