ஆப்நகரம்

கிரிஷ் கர்னாட், கிரேஸி மோகன் மறைவு கலைத்துறைக்கு மிகப்பெரிய வெற்றிடம் - வைகோ இரங்கல்!

இருபெரும் திரைத்துறை ஆளுமைகள் மறைவிற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 10 Jun 2019, 8:15 pm
கன்னட திரையுலகில் புகழ்பெற்ற கிரிஷ் கர்னாட் மற்றும் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற கிரேஸி மோகன் ஆகியோர் இன்று காலமானார்கள்.
Samayam Tamil Vaiko


இதுதொடர்பாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள வைகோ, பிரபல எழுத்தாளர், இயக்குநர், நடிகர் கிரிஷ் கர்னாட், தமிழகத்தின் சிறந்த நகைச்சுவை கலைஞர்களில் ஒருவரான கிரேஸிமோகன் ஆகிய இருவரும் இன்று இயற்கை எய்தி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கின்றது.

ஆக்ஸ்போர்டு பல்கலைகக் கழகப் பட்டதாரியான கிரிஷ் கர்னாட் அவர்கள், அனைத்திந்திய அளவில் முத்திரை பதித்த கலைஞர். இந்திய இலக்கியத்தின் மிக உயர்ந்த ஞானபீட விருதைப் பெற்றவர். பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும் சிறப்பித்தவர்.

தீவிர இடதுசாரி சிந்தனையாளர். மதவாதத்திற்கு எதிராகப் போராடியதற்காக, அவரது உயிருக்குக் குறிவைக்கப்பட்டு இருந்தாலும், அதற்காக அஞ்சாமல் ஆணித்தரமாக தனது கருத்துக்களை எடுத்து வைத்தார். களப் போராட்டங்களில் முன்னணியில் பங்கேற்றார். அவரது படைப்புகள் தமிழிலும் வெளிவந்துள்ளன.

தமிழக நாடக உலகில் தரமான நகைச்சுவை நாடகங்களை இயக்கிப் பெரும்புகழ் பெற்றவர் கிரேஸி மோகன். ஆபாசக் கலப்பு இன்றி நல்ல நகைச்சுவையைத் தந்தவர். அவருடைய வசனங்கள் நினைத்து நினைத்துச் சிரிக்கத் தக்கவை. யாரையும் புண்படுத்தாதவை. எல்லோராலும் பாராட்டப்படுபவை.

ஒரே நாளில் இரு பெருந்தகைகளின் மறைவு கலைத் துறையில் மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது. அவர்களின் மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அவர்களது உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி