ஆப்நகரம்

இன்னா செய்தாரை ஒறுத்தல் : ப. சிதம்பரம்.... அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல:வைரமுத்து | நீதிமன்ற அறையில் சுவாரஸ்ய பேச்சுவார்த்தை

நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை வைரமுத்து நேரில் சந்தித்தார். அப்போது இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற குறளை ப.சிதம்பரமும், அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்ற குறளை வைரமுத்துவும் பரிமாறிக்கொண்டனர்..

Samayam Tamil 3 Oct 2019, 6:08 pm
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் ப.சிதம்பரத்தின் விசாரணைக்காலம் இன்றுடன் (அக்.3) முடிவுக்கு வருகிறது.
Samayam Tamil Vairamuthu-Tholkappiar


இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். ஆஜர்படுத்தப்படும் இடத்துக்கு நேரில் வருகை தந்த கவிஞரும் பாடலாசிரியரும், ப.சிதம்பரத்தின் நண்பருமான வைரமுத்து, ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்தார்.

ப.சிதம்பரத்தைச் சந்தித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த வைரமுத்து தெரிவித்ததாவது : “ப.சிதம்பரத்தை நான் நேரில் சந்தித்தது அவர் முன்னாள் உள்துறை அமைச்சர் என்பதற்காக அல்ல.. இந்திய துணைக்கண்டத்துக்கு 9 நிதிநிலை அறிக்கைகளை வழங்கியவர் என்பதற்காக அல்ல... அவர் என் இலக்கிய நண்பர்.. அதனால் சந்தித்தேன் ..

திருக்குறளை மறு ஆய்வு செய்ய தற்போது நேரம் கிடைத்து இருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார்” என்றார்.

மேலும், நீதிமன்ற அறையில் நடந்த இந்த சுவாரசியமான சந்திப்பின் போது , ப. சிதம்பரம் 'இன்னா செய்தாரை ஒறுத்தல்'..என்ற குறளை மேற்கோள் காட்டினார்.

அதற்கு கவிஞர் வைரமுத்து 'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல' என்ற குறளை மேற்கோள் காட்டி, தைரியமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.



தொடர்ந்து பேசிய வைரமுத்து “நாங்கள் நீதிமன்றங்களை மதிக்கிறோம். நீதியை மதிக்கிறோம். அவரது உடல் எடை குறைந்திருக்கலாம்.. அவரது நிறம் கருத்திருக்கலாம். ஆனால் உள்ள உறுதி துளியும் குறையவில்லை. ஆனால், அவரது வயது கருதியும், உடல்நிலை கருதியும் அவருக்கான ஜாமீன் வழங்கப்பட வேண்டும். ” என்று வைரமுத்து தெரிவித்தார்.

இந்திய அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இன்றோடு விசாரணை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலும் அக்டோபர் 17 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தின் காவல் நீட்டிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ப.சிதம்பரம் தரப்பில் அளிக்கப்பட்ட ஜாமீன் மனு நிராகரிக்கபட்டது.

அடுத்த செய்தி