ஆப்நகரம்

'தமிழ் மொழியை மோடி புகழ்ந்து பேசினால், தமிழர்களுக்கு ஆபத்து வருகிறது என்று பொருள்'

அஞ்சலக கணக்கர் தேர்வு எழுதும் மொழிகளில் தமிழ் மீண்டும் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி வருத்தம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 7 Jan 2021, 6:09 pm
அஞ்சலக தேர்வுகளில் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளுடன் தமிழிலும் தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், வரும் பிப்ரவரி 14ஆம் தேதி அஞ்சலக கணக்கர் பணிக்கு ஆட்கள் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ஆங்கிலம், இந்தி மட்டுமே இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழிக்கான வாய்ப்பு மீண்டும் மறுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil file pic


இதற்கு தமிழ் ஆர்வலர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கணடனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' அஞ்சலக கணக்கர் தேர்வு எழுதும் மொழிகளில் தமிழ் மீண்டும் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சலக கணக்கர் தேர்வு வரும் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான மொழி பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில் ஆங்கிலம், இந்தி மட்டுமே இடம் பெற்றுள்ளது. மத்திய அரசு திட்டமிட்டு இந்த சதி செயலை அரங்கேற்றியுள்ளது. இதனை தமிழக வாழ்வரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

ஏற்கனவே, கடந்த 2019ஆம்ஆண்டு நடைபெற்ற அஞ்சலக தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே கேள்விகள் இடம்பெற்றன. ஒரு மாநிலத்தின் மொழியை, அதே மாநிலத்தில் மத்திய அரசு புறக்கணித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசியல் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.

தமிழக அரசு பணியாளர்களுக்கு அசத்தலான பொங்கல் போனஸ்; எவ்வளவு தெரியுமா?

அதன் பின்னர், இனிவரும் அஞ்சலக தேர்வுகளில் ஆங்கிலம், இந்தி மொழிகளுடன் தமிழிலும் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், வரும் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற உள்ள அஞ்சலக கணக்கர் தேர்வுக்கு, தமிழ் மொழி மீண்டும் புறக்கணிக்கப்பட்டிருப்பது, மோடி அரசின் ,மோசடி செயலை காட்டுகிறது. கொடுத்த வாக்குறுதியை மோடி அரசு மீறுகிறது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி பலமுறை எச்சரித்திருக்கிறது.

அதாவது, தமிழ் மொழியை குறித்து மோடி புகழ்ந்து பேசுகிறார் என்றால், தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் ஆபத்து வருகிறது என்று பொருள். போட்டி தேர்வுகளில் ஒரு மாநிலத்தின் மொழி புறக்கணிக்கப்பட்டால், கிராமப்புற இளைஞர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை புரிதல் கூட மத்திய அரசுக்கு இல்லை என்பது வேதனைக்குரியது. அதே நேரத்தில், தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதத்தை மறைமுகமாக திணிக்கக் கூடிய யுக்தி என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, அந்தந்த மாநிலங்களில் அந்த மொழிகளில் அஞ்சல கணக்கர் தேர்வை நடத்த வேண்டும். தமிழகத்தில் தமிழ் மொழியில் தேர்வை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி