ஆப்நகரம்

ஏழை மக்களை சுரண்டிய ஊழியர்கள்; லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய அரசு மருத்துவமனை!

செங்கல்பட்டு: பிரசவ வார்டில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கில் வராத பணத்தை கைப்பற்றியுள்ளது.

Samayam Tamil 30 Nov 2018, 10:35 am
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஏழைகளிடம் மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனை மேலதிகாரிகளும், மருத்துவர்களும் கண்டு கொள்வதில்லை. இதுதொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

டி.எஸ்.பி சிவபாத சேகரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு, ஆயுதப்படை பெண் காவலர்கள் 5 பேர் சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு அறையாக சோதனையிட்டு, மாலை 5 மணியளவில் பிரசவ வார்டில் நுழைந்தனர். அங்கு கணக்கில் வராத ரூ.41,000 பணம் கைப்பற்றப்பட்டது.

இதுதொடர்பாக செவிலியர், உதவியாளர், பாதுகாவலர் ஆகியோரிடம் விசாரித்தனர். அதில், குழந்தை பிறந்தவுடன் கேமரா இல்லாத இடத்திற்கு பெற்றோர் வரவழைக்கப்பட்டு லஞ்சம் வாங்கப்பட்டு வந்துள்ளது.

ஒவ்வொருவரிடம் இருந்து குறைந்தபட்சம் ரூ.1000 வசூலித்து வந்துள்ளனர். பிடிபட்ட ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு நிலவியது. தொடர் சோதனைகளால் லஞ்சம் குறையும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி