ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு... தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை..!

தமிழகத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம் மீதான அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த வேண்டும் என்று முக்கிய கோரிக்கை எழுந்துள்ளது.

Samayam Tamil 22 Jan 2023, 1:45 pm
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம் மீதான அகவிலைப்படியை உயர்த்த கோரி நீண்ட நாட்களாக தமிழக அரசுக்கு கோரிக்கை வலுத்து வரும் நிலையில் திமுக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil dearness allowance


அதில் அவர் கூறியுள்ளதாவது; அரசு போக்குவரத்துக் கழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பென்சனுடன் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மிக குறைவான பென்சனையே அவர்கள் பெற்று வருகின்றனர்.

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களை தவிர, மற்ற அனைத்து அரசு தரப்பு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுடன் கூடிய பென்சன் வழங்கப்பட்டு வருகிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வினை 100 நாட்களுக்குள் வழங்கிவிடுவதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு, ஆட்சியமைத்து 600 நாட்களைக் கடந்தும் மேற்கண்ட வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.

இதனால் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 88 ஆயிரம் பேர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் பெருத்த ஏமாற்றத்துடன் ஏங்கியே விண்ணுலகம் சென்றுவிட்டனர். மேலும், போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் மருத்துவக் காப்பீடு, அதாவது முதல்வர் காப்பீடு திட்டம்கூட இல்லாமல் குறைவான பென்சனில் பொருளாதார வசதியின்றி மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் கடுமையான நோயுடன் போராடி வருகின்றனர்.

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருவதோடு, நீதிமன்றம் வரை சென்றும் தற்போதைய திமுக அரசு செவிசாய்க்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. வெற்றி பெற்றவுடன் 100 நாளில் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திமுக அரசு, இதுவரை அதைப்பற்றி வாய் திறக்காமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த விவகாரத்தில் திமுக அரசு காலம் தாழ்த்தாமல் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம் மீதான அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த வேண்டும் என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி