ஆப்நகரம்

டிடிவியுடன் மோதல்... அரசியல் பயணம் கூட்டணியா? தனியாகவா? - சசிகலா பதில்!

அரசியல் பயணத்தை விரைவில் தொடங்கவிருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்

Samayam Tamil 26 Apr 2022, 10:47 am
நாகூரில் நாளை நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் சசிகலா திருச்சி சென்றார். அதற்கு முன்பாக, திருக்கடையூர் மற்றும் சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயில்களில் அவர் சுவாமி தரிசனம் செய்யவுள்ளார்.
Samayam Tamil சசிகலா, டிடிவி தினகரன்
சசிகலா, டிடிவி தினகரன்


இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலாவிடம் அவரது அரசியல் பயணம் தனியாகவா அல்லது கூட்டணி கட்சியுடனா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இங்கு தான் இருக்கிறீர்கள் பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்தார்.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் மாற்றம் நிகழும் என காத்திருந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும், அதிமுகவை கைப்பற்றும் முயற்சிகளில் சசிகலா இறங்கியுள்ளார். தொலைபேசி உரையாடல் ஆடியோக்களை வெளியிடுவது, ஓபிஎஸ் உடன் பேச்சு என்பன உள்ளிட்ட காய்களை அவர் நகர்த்தினாலும் இதுவரை அவர் பக்கம் தொண்டர்கள் பெரிதாக சாயவில்லை. மாறாக எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி வருகிறது.

இதனிடையே, அண்மையில் வெளியான பொதுச் செயலாளர் வழக்கு மீதான தீர்ப்பு அவருக்கு கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தாலும், சசிகலா முகாமுக்குள் சலசலப்புகள் ஏற்படத் தொடங்கி விட்டன. கோயில் கோயிலாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா, உறுதியான முடிவெடுத்து தடாலடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் அவரை வலியுறுத்தி வருவதாகவும், அதற்கு சசிகலா மவுனம் காப்பதால், அவரை விட்டு விலகு ஆதரவாளர்கள் யோசித்து வருவதாகவும், அவர்களை அழைத்து சமாதானம் பேசும் முயற்சிகளில் சசிகலா ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
பதிலுக்கு பதில் - வலுக்கும் ஆளுநர் முதல்வர் மோதல்!
இந்த பின்னணியில், சசிகலா தனது ஆதரவாளர்களுடன் தமிழ் புத்தாண்டு அன்று தி.நகர் இல்லத்தில் ஆலோசனை செய்துள்ளார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில், புதுக்கட்சி, கட்சிக்கு கொடி, மாநாடு நடத்துவது என அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அரசியல் பயணத்துக்கான தற்காலிக ஏற்பாடாக ‘அம்மா திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற பெயரில் கட்சியாக செயல்படவும், தொகுதி வாரியான சுற்றுப்பயணம் சென்று பொதுக்கூட்டம் நடத்தவும் சசிகலா தயாராகி வருவதாக ‘சசிகலா புது ஸ்கெட்ச்: லிஸ்ட்டில் யார்? - டரியலில் அதிமுக!’ என்ற தலைப்பில் சமயம் தமிழில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

சசிகலா புது ஸ்கெட்ச்: லிஸ்ட்டில் யார்? - டரியலில் அதிமுக!
இந்த நிலையில், திருச்சி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக தெரிவித்தார். அதேபோல், திருச்சியில் தனது அரசியல் பயணம் பற்றி பொறுத்திருந்து பாருங்கள் என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். மேலும், உங்களை வரவேற்க வரும் அமமுகவினரை தினகரன் கட்சியை விட்டு நீக்குகிறாரா என்ற கேள்விக்கு, ‘கோயிலுக்கு செல்கிறேன். இதுகுறித்து அப்புறம் பதிலளிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சசிகலா மீது டிடிவி தினகரன் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. டிடிவி தினகரன் உடன் இணைந்து பயணிப்பது அதிமுகவை கைப்பற்றும் தனது முயற்சிகளுக்கு தற்போதைய சூழலில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் அவரை சசிகலா ஓரங்கட்டுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது இந்த உரசல் பகிரங்கமாக வெளிப்பட்டது. சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்ட அமமுக நிர்வாகிகளை அவ்வப்போது கண்டித்து வந்த டிடிவி தினகரன், தற்போது அவர்களை கட்சியை விட்டே நீக்கும் தடாலடியான நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார். மேலும், சசிகலாவை வரவேற்கவோ அவருக்காக கூட்டம் கூட்டுவதையோ அமமுக நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவையும் அவர் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் திருச்சியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, டிடிவியுடன் மோதல் இல்லை என்று வெளிப்படையாக சொல்லாமல், அப்புறம் பதிலளிக்கிறேன் என்று சசிகலா தெரிவித்திருப்பது, உள்ளுக்குள் ஏதோ நடப்பதை சுட்டிக்காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி