ஆப்நகரம்

இப்படியொரு ஏமாற்றம் தந்த மேட்டூர் அணை - விவசாயிகள் வேதனை!

கடந்த ஒரு வாரமாக 100 அடிக்கும் மேல் நீர்மட்டம் காணப்பட்ட நிலையில் தற்போது நீர்மட்டம் குறைந்துள்ளது.

Samayam Tamil 1 Nov 2020, 12:01 pm
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை, உலகிலேயே உயரமான நேர்கோட்டில் அமைந்த நீர்த்தேக்கம் ஆகும். இங்கிருந்து வெளியேற்றப்படும் நீர் மூலம் 12 மாவட்டங்களில் உள்ள சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும்போது அணை மற்றும் சுரங்க மின்நிலையம் மூலம் 250 மெகாவாட் மற்றும் காவிரி ஆற்றில் 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
Samayam Tamil Mettur Dam


கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடும். இது நேராக மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. கடந்த சில வாரங்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கும் மேல் சென்றது.

இதற்கிடையில் டெல்டா மாவட்டங்களுக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக 100 அடிக்கும் மேல் நீர்மட்டம் நீடித்தது. இந்த சூழலில் இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 99.70 அடியாக குறைந்துள்ளது.

எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இதற்கு கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்தது காரணமாக சொல்லப்படுகிறது. தற்போது நீர் இருப்பு 64.45 டி.எம்.சியாக இருக்கிறது. நீர்வரத்து வினாடிக்கு 7,113 கன அடியாக குறைந்திருக்கிறது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கும் மேல் இருந்தால் பல்வேறு மாவட்ட விவசாயத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இந்த சூழலில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி