ஆப்நகரம்

விநாயகர் சதுர்த்திக்கு 1.5லட்சம் சிலைகள் வைக்கப்படும்: நீதிமன்ற எச்சரிக்கையை மதிக்காத இந்து முன்னணி!

தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 19 Aug 2020, 7:14 pm
கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. அத்துடன், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாடவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. எனினும், அரசு அனுமதி வழங்கவிட்டாலும், தடையை மீறி ஏற்பாடு செய்தபடி விநாயகர் சதுர்த்தி விழா ஒன்றரை லட்சம் இடங்களில் திட்டமிட்டபடி நடக்கும் என்று இந்து முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அதன் தொடர்ச்சியாக, இந்து முன்னணியினர் இந்த அறிவிப்பை தடுத்து நிறுத்த வேண்டும். தடையை மீறி ஊர்வலமாக எடுத்துச் சென்றால் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மற்றும் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு உத்தரவுகள் மீறப்பட்டால் அதை தமிழக அரசு கவனித்து கொள்ளும் என விளக்கமளித்ததுடன், இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்து வழக்கை முடித்து வைத்தது.

அதேபோல், விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த கோரி, ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமராஜ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் செய்த வழக்கு விசாரணையின் போது, ஒரு நாளில் சுமார் 6000 பேருக்கு கொரோனா தொற்று, இந்த சூழலில் எப்படி விநாயகர் சதுர்த்தி விழாவை அனுமதிக்க முடியும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து உயர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கருத்து தெரிவித்த நீதிமன்றம், மனுதாரர் மனுவை திரும்பப்பெறாவிட்டால் அதிக அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும் என்றும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

சென்னையில் மட்டும் 2,517 பேர் பலி..! தமிழகம் முழுக்க 6,123 பேர் உயிரிழந்துள்ளனர்...

உயர் நீதிமன்றம் இதுபோன்று எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், “விநாயகர் சதுர்த்தி, ஊர்வலங்கள் நடத்த வேண்டும் என்று அனுமதி கேட்டு நாங்கள் வைத்த கோரிக்கைக்கு இப்போது வரை எந்த பதிலும் வரவில்லை. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு மக்கள் கூட்டமாக கூடுகிறார்கள். அங்கு வராத கொரோனா விநாயகர் சதுர்த்தி விழாவில் வந்துவிடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் கூடுகிறார்கள். இதனை அரசு அதிகாரிகளோ, காவல்துறையோ கண்டு கொள்ளவில்லை. நாங்கள் அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு சிலைகளை வைக்கிறோம் என்று கூறினாலும் இந்த அரசாங்கம் எங்களை புறக்கணிக்கிறது” என்றார்.

மேலும், “வருகிற 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட இருக்கிறோம். தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் சிலைகளை கடந்த ஆண்டு எங்கெல்லாம் வைக்கப்பட்டதோ அங்கு எல்லாம் வைத்து வழிபடுவோம்” என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி