ஆப்நகரம்

தமிழகத்தில் பொதுமுடக்கம் மீண்டும் நீட்டிப்பு... புதிய தளர்வுகள் என்னென்ன?

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன்கூடிய பொதுமுடக்கம் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புறநகர் ரயில் சேவைகளுக்கான அனுமதி, திரையரங்குகளை திறப்பதற்கான அனுமதி ஆகியவை இந்த முறையும் அளிக்கப்படவில்லை.

Samayam Tamil 28 Oct 2020, 9:30 am
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன்கூடிய நான்காம்கட்ட பொதுமுடக்கம் நாளையுடன் (செப். 30) நிறைவடைய உள்ளது. இதனையடுத்து, பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடனும், மருத்துவ நிபுணர்களுடனும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
Samayam Tamil unlock 5


இதன் தொடர்ச்சியாக, தற்போது நடைமுறையில் உள்ள பொதுமுடக்கம் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள ஐந்தாம் கட்ட பொதுமுடக்கத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

“பள்ளிகள் திறப்பு முதல்வருக்கு விளையாட்டு, மக்களுக்கு உயிர் பிரச்சினை” முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!

* 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம் என்று அறிவித்து ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணை நிறுத்தி வைக்கப்படுகிறது.

* பள்ளி, கல்லூரிகள், பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கான தடை நீட்டிக்கப்படுகிறது.

* முக்கியமாக புறநகர் ரயில் சேவைக்கான தடையும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

* இதேபோன்று, இந்த முறை அனுமதி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கடற்கரைகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை மீண்டும் திறப்பதற்கான தடையும் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


* உணவகங்கள், தேநீ்ர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அவை இரவு 9 மணி வரை இயங்கலாம் என்றும், பார்சல் சேவை இரவு 10 மணி வரை தொடரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* திரைப்பட படப்பிடிப்புகளில் 100 நபர்கள் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும் இதில் பார்வையாளர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.

* வெளிமாநிலங்களை சேர்ந்த 50 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டுவரும் நிலையில், இனி இங்கு 100 விமானங்கள் தரையிறங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

*மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, பிற வழிதடங்களில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும்.


* ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வாரச் சந்தைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

* 144 தடை உத்தரவு மாநிலம் முழுவதும் தொடர்ந்து அமலில் இருக்கும்.

*மதம்சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்கான தடையும் தொடரும்.

* மாநிலம் முழவதும், நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் (containment zone) தற்போதைய நடைமுறைகளின்படி, எவ்வித தளர்வுகளும் இன்றி முழு பொதுமுடக்கம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி