ஆப்நகரம்

மாவட்டம் மாவட்டமாக சுற்றும் முதல்வர்: இதுக்கு பின்னால இவ்ளோ காரணம் இருக்கா?

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் சுற்றுப் பயணம் மேற்கொள்வதன் பின்னணியில் மேலும் சில காரணங்களும் உள்ளன.

Samayam Tamil 3 Sep 2020, 8:27 am
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
Samayam Tamil what are the reasons for chief minister edappadi palanisamy to tour the districts
மாவட்டம் மாவட்டமாக சுற்றும் முதல்வர்: இதுக்கு பின்னால இவ்ளோ காரணம் இருக்கா?


ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு எந்த அளவு உள்ளது, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து முதல்வர் ஆய்வு செய்கிறார். மேலும் பொது முடக்க தளர்வு குறித்தும் கேட்டறிகிறார்.

தள்ளிப் போன சுற்றுப் பயணம்!

இந்நிலையில் செப்டம்பர் 2, 4 ஆகிய தேதிகளில் திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி மரணமடைந்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு 7 நாள்கள் துக்கம் அணுசரிக்கிறது.

எனவே முதல்வரின் பயணத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. செப்டம்பர் 7, 9 ஆகிய தேதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கொரோனா தடுப்புப் பணி மட்டும் தானா?

அதன்படி 7ஆம் தேதி திருவள்ளூரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதுடன் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கிவைக்கிறார். 9 ஆம் தேதி காலை திருவண்ணாமலை மாவட்டத்திலும், அன்று மாலை விழுப்புரம் மாவட்டத்திலும் முதல்வர் ஆய்வு செய்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த ஆய்வுப் பணிகள் கொரோனாவுக்காக மட்டுமல்ல, தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுக அரசு பிற நலத்திட்டங்களை தொடங்கிவைப்பதன் மூலம் மக்கள் கவனத்தை பெற முயற்சிக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சசிகலாவை சுற்றி பின்னப்படும் அரசியல் வலை: பாஜகவுக்கு வந்த ‘ஷாக்’ நியூஸ்!

ஏன் இந்த சுற்றுப் பயணம்?

மேலும் இந்த சுற்றுப் பயணம் குறித்து வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி தொடர்ந்து இருந்துவரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது இமேஜை உயர்த்த இந்த சுற்றுப்பயணத்தை சரியாக பயன்படுத்துகிறார் என்ற பேச்சு கட்சிக்குள்ளேயே கேட்கிறது.

விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த முதல்வர், எளிமையான மனிதர் என அவரை முன்வைத்து சத்தமில்லாமல் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் நிலையில் பயணத்தின் நடுவே காரை நிறுத்தி விவசாயப் பணிகளை மேற்கொண்டுள்ள மக்களிடம் சகஜமாக உரையாடுவது அவரை மக்கள் மத்தியில் இன்னும் நெருக்கமாக காட்ட உதவும் என்கிறார்கள்.

ஓ.பி.எஸ்ஸுக்கும் அனுமதி இல்லையா?

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் கூட்டங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக்கூறி பிற கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படவில்லை.

மதுரையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்ட போது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேனியில் தான் இருந்தார். அவரும்கூட அந்த கூட்டத்தில் அழைக்கப்படவில்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்த துணை முதல்வரைக் கூட அழைக்காமல் என்ன ஆலோசனை நடத்துகிறீர்கள் என்ற கேள்வி அப்போதே கட்சி வட்டாரங்களில் எழுப்பப்பட்டது.

பொதுச் செயலாளர் ரேஸில் முந்துவது யார்? திமுகவுக்குள் நடந்தது என்ன?

இந்நிலையில் அரசுப் பணியோடு சேர்த்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது கட்சியினரையும் சந்தித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. நலத்திட்டங்கள், சாலையோர விசாரிப்புகள் மூலம் மக்கள் மத்தியிலும், அந்தந்தப் பகுதி கட்சி நிர்வாகிகளுடன் பேசுவதன் மூலம் கட்சிக்குள்ளேயும் தனக்கான இமேஜை வலுவாக பதிக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார் என்கிறார்கள்.

அடுத்த செய்தி