ஊரடங்கு - முதல்வர் ஆலோசனை?
தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜூலை 12ஆம் தேதி காலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அடுத்தகட்ட தளர்வுகள், கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் இந்த முறை மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறையும் கொரோனா பாதிப்பு!
ஸ்டாலின் அறிவிப்புக்கு காத்திருக்கும் சசிகலா: தேதி குறிச்சாச்சா?
நாள் ஒன்றுக்கு 36ஆயிரம் என்ற அளவில் இருந்த பாதிப்பு தற்போது 3,200 என்ற அளவுக்கு இறங்கியுள்ளது. இதனால் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பிலே மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகளை வெளியிட்டது. அந்த வகையில் மிகச் சில பணிகளுக்கு மட்டுமே தடை தொடர்கிறது.
தொடரும் தடைகள்!
மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து, திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றுக்கு தடை தொடர்ந்துள்ளது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
திரையரங்குகளுக்கு அனுமதியளிக்க வாய்ப்பு!
இடுப்பில் தொற்றிய திமுக அமைச்சர்: கடுப்பில் கட்சித் தலைமை!
இந்நிலையில் இந்த முறை எந்தெந்த பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என விசாரித்தோம். திரைத்துறையில் படப்பிடிப்பு மற்றும் பிற பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக 50 லட்சம் ரூபாய் வழங்கினர். அப்போது திரையரங்குகளை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே இம்முறை 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதியளிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.
கடைகளுக்கு தளர்வு!
தமிழ்நாட்டில் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை 10 மணியாக மாற்ற வணிகர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. எனவே இம்முறை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படலாம் அல்லது குறைந்தது ஒரு மணிநேரமாவது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். உணவகங்கள், டீக் கடைகளில் வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் 75 சதவீதம் பேர் வருகை தர அனுமதி வழங்கப்படலாம்.
பள்ளிகள் திறப்பு - அரசு எடுக்கும் முடிவு!
சசிகலாவை இப்படியா பேசினார் எடப்பாடி? ஓபிஎஸ் இனி காட்டுவாரா அதிரடி?
பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து முக்கிய முடிவெடுக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் கல்லூரிகள் திறக்கப்படலாம், அதைத் தொடர்ந்து பள்ளிகளும் திறக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன. இது தொடர்பாக மருத்துவ வல்லுநர்களுடன் அரசு ஆலோசனை நடத்துகிறது. அத்துடன் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.