ஆப்நகரம்

டெல்லி, சென்னை அடுத்து பெங்களூரு: சசிகலாவுக்காக ரகசியமாக பறக்கும் தினகரன்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் டெல்லி பயணம் குறித்த தகவல்கள் தற்போது தெரியவந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக சசிகலாவை சந்திக்கவும் அவர் செல்லவுள்ளார்.

Samayam Tamil 21 Sep 2020, 10:18 pm
அதிமுகவில் ஈ-பி-எஸ் - ஓ.பி.எஸ். இணைப்புக்கு பின்னர் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி குடிம்பத்தினர் கட்சியின் இருந்து முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டனர். அதன்பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன், பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனிடையே, அதிமுக முதல்வர் வேட்பாளர், பாஜக கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் என எதையு விமர்சிக்காமல் மவுனம் காத்து வந்த டிடிவி தினகரன், விழுப்புரம் பண்ணை வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். கொரோனா தொற்று பரவல் காரணமாக அவர் பொதுவெளியில் தலைகாட்டவில்லை என அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். ஆனால், சசிகலாவின் சொத்துகள் முடக்கம், விடுதலை உள்ளிட்ட காரணங்களால் அவர் மவுனம் காப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறினர்.

இந்த நிலையில், நேற்று திடீர் பயணமாக காலையில் தனி விமானம் மூலம் டெல்லி சென்று மாலையில் மீண்டும் சென்னை திரும்பினார். அமைதியாக இருந்த டிடிவி தினகரனின் இந்த திடீர் பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த பயணம் பற்றிய தகவல் தினகரனுக்கு நெருக்கமான அமமுகவின் சீனியர் தலைவர்களுக்கும் சொல்லப்படவில்லை என கூறப்படுகிறது.

டெல்லியில் யாரை சந்தித்தார் தினகரன்? பாஜக வளையத்துக்குள் அமமுக?

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை பதிலளித்துள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே அவரை வெளியே கொண்டு வரும் நடவடிக்கைகளிலும் டிடிவி தினகரன் இறங்கியுள்ளார். அபராதத் தொகையை செலுத்துவதற்காக சசிகலா தரப்பு மனுத்தாக்கலும் செய்துள்ளது.

ஆனால், நன்னடத்தை உள்ளிட்ட வழிமுறைகளின் அடிப்படையில் சிறையில் இருந்து முன் கூட்டியே சசிகலா விடுதலையாக வாய்ப்புள்ளதாகவும், இதுகுறித்து சிறைத்துறையே முடிவெடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இதற்காக சிறை நிர்வாகத்திடம் சசிகலா தரப்பில் கோரிக்கை கடிதம் எழுதப்பட்டு அது நிலுவையில் உள்ளதாகவும் தெரிகிறது.

அந்த பிண்ணனியில் இந்த பயணத்தை ஒப்பிட்டு, பாஜக டெல்லி மேலிடத்திடம் இது தொடர்பாக டிடிவி தினகரன் பேச சென்றதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், டிடிவி தினகரனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் அவரது பயணம் குறித்து கூறுகையில், டெல்லி சென்ற டிடிவி தினகரன், அங்குள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அங்கு மூத்த வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து சசிகலாவுக்கான அபராதத் தொகையை செலுத்தி அவரை அக்டோபர் மாதத்திலேயே வெளியே கொண்டு வருவது தொடர்பாக அவர் பேசியதாக தெரிவித்துள்ளனர். மேலும், பாஜக தரப்பில் யாரையும் இந்த பயணத்தின் போது டிடிவி தினகரன் சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

முதல்வர் பதவி வேண்டாம்: ஆட்டத்தை ஆரம்பிக்கும் ஓ.பி.எஸ்!

சசிகலாவின் உடல் நிலை தற்போது சரியாக இல்லையென்பதால், ஜனவரி மாதத்தில் அவர் ரிலீசானால் தேர்தல் பணிகளை சரிவர மேற்கொள்ள முடியாது என அவர்களது தரப்பு கருதுவதால், அதற்கு முன்னரே சசிகலாவை வெளியே கொண்டு வந்து விட்டால் ஓய்வுக்கு பின்னர் தேர்தல் பணிகளை அவர் கவனிக்கலாம் என்பதால் இந்த நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், வருகிற புதன்கிழமை பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை டிடிவி தினகரன் சந்திக்கவுள்ளார். சசிகலா விடுதலை தொடர்பாக ஆலோசிக்க தினகரன் டெல்லி சென்று வந்த நிலையில், நாளை மறுதினம் சசிகலாவை சந்தித்து அந்த தகவல்களை பரிமாறிக் கொள்வார் என கூறப்படுகிறது. சசிகலா விடுதலை தேதி வெளியானதற்கிடையே, ஆறு மாதங்கள் கழித்து சசிகலாவை டிடிவி தினகரன் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி