ஆப்நகரம்

அடுத்த கட்ட பொது முடக்கம்: முதல்வர் நடத்தும் ஆலோசனை!

மத்திய அரசு பொது முடக்கத்தை மீண்டும் ஒரு மாத காலத்துக்கு நீட்டித்துள்ள நிலையில் இன்று தமிழக முதல்வர் முக்கிய ஆலோசனையை மேற்கொள்கிறார்.

Samayam Tamil 28 Oct 2020, 7:46 am
மார்ச் மாதம் முதல் அமலில் உள்ள கொரோனா பொது முடக்கம் நவம்பர் 30ஆம் தேதி வரை தொடரும் என மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட கட்டுப்பாடுகள், நவம்பர் 30ஆம் தேதி வரை தொடரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil what will be the relaxations in the next phase lockdown in tamilnadu
அடுத்த கட்ட பொது முடக்கம்: முதல்வர் நடத்தும் ஆலோசனை!


மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்துக்கு எந்தத் தடையும் இல்லை. சிறப்பு அனுமதி தேவையில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. மேலும்,

*மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்து அனுமதி,

*பயிற்சிகளுக்கான நீச்சல் குளங்களை திறந்து கொள்ள அனுமதி,

*50 சதவீத இருக்கைகளுடன் சினிமா தியேட்டர்கள் இயங்க அனுமதி,

ஆகியவற்றுக்கு கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டது. பள்ளிகள் திறப்பு குறித்தும் மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் நடத்தும் ஆலோசனை!

இந்நிலையில் இன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ வல்லுநர்கள் குழு ஆகியோரோடு ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலர் கலந்து கொள்கின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்கு பின்னர் தமிழக அரசு சார்பில் அடுத்த கட்ட பொது முடக்கத்துக்கான அறிவிப்பு வெளியாகும்.

எதிர்பார்ப்புகள் என்னென்ன?

திரையரங்குகளை திறக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் முதல்வரை சந்தித்து சில நாள்களுக்கு முன்னர் மனு அளித்தனர். ஏழு மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் திரைத்துறையைச் சார்ந்தோர், திரையரங்கு ஊழியர்கள் என லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு கடந்த மாதமே இதற்கு அனுமதி அளித்த நிலையில் புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்கள் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கின. இதனால் இந்த முறை தமிழக அரசு கட்டாயம் திரையரங்குகள் திறப்பு குறித்து முடிவை அறிவிக்கும் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிகள் திறப்பு எப்போது?

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல மாநிலங்களில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைத்து பாடம் நடத்த தொடங்கியுள்ளனர். ஆன்லைன் மூலம் கல்வி கற்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர்கள் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் என பல மாநிலங்கள் தெரிவித்துள்ளன. குஜராத்தில் தீபாவளி விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் எப்போது பள்ளிகள் தொடங்கப்படும் என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புறநகர் ரயில்களுக்கு அனுமதி?

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காரணமாக சென்னையில் தி நகருக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களை இயக்க மத்திய அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ள நிலையில் இந்த முறை அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி