ஆப்நகரம்

கலைஞர் நூலக கட்டுமானப் பணி எப்போது முடியும்? வெளியான தகவல்!

மதுரையில் கலைஞர் நூலக கட்டுமானப் பணி வருகிற ஜனவரி மாதம் 2ஆவது வாரத்தில் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது

Authored bySM Prabu | Samayam Tamil 20 Dec 2022, 4:47 pm
எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், படைப்பாளி, அரசியல், ஆட்சி என எத்துறையைத் தொட்டாலும், அத்துறையில் முத்திரை பதித்த மாபெரும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமையைப் போற்றும் விதமாக, “சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் இரண்டு இலட்சம் சதுரஅடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்படும்.” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
Samayam Tamil கலைஞர் நூலகம்
கலைஞர் நூலகம்


அந்த அறிவிப்பிற்கிணங்க, மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப் பணித் துறை வளாகத்தில் 2.70 ஏக்கர் நிலத்தில், 99 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2,13,288 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கட்டப்படவுள்ள அடித்தளத்துடன் கூடிய 8 தளங்கள் கொண்ட கலைஞர் நினைவு நூலகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.

கலைஞர் நினைவு நூலகத்திற்குத் தேவையான நூல்கள், மின்நூல்கள் இணையவழி பருவ இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு ரூபாய் 10 கோடியும், தொழில் நுட்ப சாதனங்கள் கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசால் ரூபாய் 5 கோடியும் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரையில் கலைஞர் நூலக கட்டுமானப் பணி வருகிற ஜனவரி மாதம் 2ஆவது வாரத்தில் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது. கலைஞர் நூலக கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, இரவு பகலாக உள் அலங்காரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2வது வாரத்திற்குள் கட்டுமான பணிகளை முடித்து கட்டிடத்தை ஒப்படைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

ரயில் பயணிகள் கவனத்திற்கு... கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் அறிவிப்பு... மிஸ் பண்ணிடாதீங்க!
இந்த நூலகத்தில் இலவச வை-பை வசதி, எஸ்கலேட்டர், மின்சார லிப்ட் வசதிகள் மற்றும் சிற்றுண்டிச்சாலை போன்ற வசதிகள் உள்ளன. தரை தளத்தில், வரவேற்பு மண்டபம், தமிழ் கலாச்சாரம் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டு அரங்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஆகியவை உள்ளன. நூலகத்தின் கீழ் பகுதியில் 100 கார்கள் மற்றும் 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தில் தமிழ், ஆங்கில புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம், புவியியல், உணவுமுறை, உளவியல், பொறியியல், பொருளாதாரம், பொது நிர்வாகம், மருத்துவம், இலக்கியம், வாழ்க்கை வரலாறு, பயணம், விவசாயம், சுற்றுச்சூழல், அரிய நூல்கள் என பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 2.50 லட்சம் புத்தகங்கள் இடம்பெற உள்ளன.

மொத்தம் ரூ.114 கோடியில் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.99 கோடியும், புத்தகங்களுக்கு ரூ.10 கோடியும், கணினி உபகரணங்களுக்கு ரூ.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆய்வாளர்கள், போட்டித் தேர்வு எழுதுவோர், பேராசிரியர்கள், அறிஞர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்களுக்கு இந்த நூலகம் வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி