ஆப்நகரம்

பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் தேதி: அண்ணா பல்கலை., அறிவிப்பு!

பொறியியல் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகள் வரும் 23 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

Samayam Tamil 1 Nov 2020, 11:25 pm
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இதனிடையே, பொறியியல் கல்லூரிகளில் 2020-21ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு வகுப்புகளைத் தொடங்குவதற்கான புதிய அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டது.
Samayam Tamil அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்


அதன்படி, பொறியியல் இளங்கலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் சேரும் டிப்ளமோ மாணவர்களுக்கான சேர்க்கைப் பணிகள் அனைத்தும் நவம்பர் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். டிசம்பர் 1ஆம் தேதிக்குள் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், அன்லாக் முறையின்படி பல்வேறு தளர்வுகளை அளித்து வரும் தமிழக அரசு, அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் நவம்பர் 16 முதல் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி இதுதான்; ஆன்லைன் வகுப்பிற்கு குட் பை!

இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகள் வரும் 23 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் நடப்பு பருவத்துக்கான வகுப்புகள் 23 ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி உடன் முடிவடையும் என்றும் பருவத் தேர்வுகள் மார்ச் 8 ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், அதில், 71 ஆயிரத்து 195 இடங்கள் நிரம்பிய நிலையில், முதலாமாண்டு மாணவர்களுக்கான முன்பயிற்சி வகுப்புகள் வரும் 9 ஆம் தேதி முதல் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி