ஆப்நகரம்

சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன்: எடப்பாடிக்கு தெம்பூட்டும் ‘ஈகோ’ பாலிடிக்ஸ்!

சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒரே குரலில் பேசிவந்தாலும் ஒன்றாக கைகோர்ப்பது எப்போது என்று கேள்வி எழுந்துள்ளது.

Samayam Tamil 18 Aug 2022, 9:14 am
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது. ஜெயலலிதா மறைந்ததிலிருந்தே அதிமுகவுக்குள் பல்வேறு அதிரடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சர்ச்சைகளும், சலசலப்புகளும் குறைந்தபாடில்லை.
Samayam Tamil when will sasikala o pannerselvam ttv dhinakaran meets ego politics that are fueling edappadi palanisamy
சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன்: எடப்பாடிக்கு தெம்பூட்டும் ‘ஈகோ’ பாலிடிக்ஸ்!


இரு துருவங்களான இரட்டை குழல் துப்பாக்கி!

ஜுன் 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தின் போதே ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகள் பிளவுபட்டு நின்றன. ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதும் அரங்கேறி இருவரும் இரு துருவங்களானார்கள்.

எடப்பாடிக்கு கூட்டப்பட்ட கூட்டம்!

அதன்பின்னர் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்கள் சிலருடன் இணைந்து பயணித்து வந்தார். இருப்பினும் தொண்டர்களை சந்திக்க சுற்றுப் பயணத்தை தொடங்கவில்லை. எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்களின் ஆதரவோடு பல இடங்களுக்கு சென்றார். அங்கு திரளான கூட்டம் கூட்டப்பட்டது.

டெல்லி ஆதரவு மூவர் அணிக்கா?

சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் மூன்று முனைகளிலிருந்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் இவர்கள் மூவரும் சேர்ந்து பயணிப்பதற்கான சூழல் உருவாவதாக அரசியல் நோக்கர்கள் கணித்தனர். டெல்லியின் ஆதரவு பார்வையும் இந்த மூவர் அணிக்கே இருப்பதாக சொல்லப்பட்டது.

சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன்: சந்திப்பு எப்போது?

நேற்றைய தினம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. இதனால் மூவர் அணியினர் மேலும் குஷியாகினர். ஆனாலும் அவர்கள் ஒருவர் மற்றொருவரை நேரடியாக சந்தித்து பேசாமல் தவிர்த்து வருகின்றனர்.

சசிகலா சொன்னது இதுதான்!

இன்று சசிகலாவின் பிறந்தநாள். 68ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் சசிகலாவை நேரில் சென்று டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பார்களா என்பது தான் இன்றைய ஹாட் டாபிக்காக உள்ளது. எனது பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்கள் என்னை நேரடியாக சந்திப்பதை தவிர்த்து அந்தந்த பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவுங்கள். உங்களை நான் நேரில் சந்திக்க வருகிறேன் என்று சசிகலா கூறியிருந்தார்.

இணைப்பை தடுக்கும் ஈகோ பாலிடிக்ஸ்!

தொண்டர்களுக்கு அன்புக்கட்டளை பிறப்பித்திருந்தாலும் ஓபிஎஸ்ஸும், தினகரனும் இந்த நாளை பயன்படுத்தி சசிகலாவை சந்திப்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என மூவரும் கூறினாலும் யார் முதல் அடி எடுத்து வைப்பது என்ற எண்ணம் மூவரிடமே இருப்பதாக சொல்கிறார்கள்.

அடுத்த செய்தி