ஆப்நகரம்

வெள்ளம் நிவாரணம் ரூ.10,000: தமிழக அரசு அறிவிப்பு எப்போது?

MK STALIN சென்னை மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 18 Nov 2021, 12:00 pm
தீபாவளி கொண்டாட்டத்தில் இருந்த சென்னை மக்கள் திடீரென பெய்த கனமழையால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். நவம்பர் 6ஆம் தேதி சனிக்கிழமை இரவு விடிய விடிய பெய்த கனமழையால் சென்னையில் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
Samayam Tamil tn flood relief fund


தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக களத்தில் இறங்கி வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, அரசு இயந்திரத்தை வேகமாக இயங்கச் செய்தார். மீட்பு பணிகள் ஒரு பக்கம் தொடர்ந்தாலும் மழை குறைந்தபாடில்லை. அந்த வாரம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததில் சென்னையில் பல பகுதிகள் தீவு போல் காட்சியளித்தன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததில் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.

திருவொற்றியூர், மணலி, புளியந்தோப்பு, பட்டாளம், செம்மஞ்சேரி, கொளத்தூர், கோட்டூர்புரம், வில்லிவாக்கம், மேற்கு மாம்பலம், தி.நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது.
புரட்டி எடுக்கப் போகும் பெரு மழை: சென்னை மக்களே உஷார்!
விடாமல் பெய்த கனமழையால் நள்ளிரவிலேயே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீட்டு உபயோகப் பொருள்கள் நீரில் மூழ்கின. மின் சாதனப் பொருள்களான பிரிட்ஜ், டிவி, வாஷிங் மிஷின் ஆகிய பொருள்கள் தண்ணீரில் நனைந்து சேதமாகின. மணலி எம்ஜிஆர் நகர்ப் பகுதிகளில் மழை நீரோடு கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் பாய்ந்தது. ஏரிகளுக்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் புகுந்தன.

மணலி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். அவரிடம் சமயம் தமிழ் சார்பாக பேசினோம். “12 நாள்களாக வீடு முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்தது. சிறுக சிறுக சேமித்து வாங்கிய பொருள்கள் எல்லாம் நீரில் மூழ்கிவிட்டன. அன்றாடம் வேலைக்கு சென்றால் தான் வருமானம். முக்கியமான பொருள்களை மட்டும் எடுத்துக் கொண்டு தெரிந்தவர்கள் வீட்டுக்கு சென்று தான் தூங்கினோம். 12 நாள்களாக வருமானம் இல்லை. கடன் வாங்கிதான் சமாளித்து வருகிறோம். மழையால் பழுதான பொருள்களை சரி செய்ய இன்னும் பல மாத உழைப்பு தேவைப்படும். அரசு சார்பாக உணவு மட்டுமே கொடுத்தார்கள். இந்த பாதிப்பிலிருந்து நாங்கள் மீண்டு வருவது எப்போது என தெரியவில்லை. அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்கினால் மட்டுமே இதிலிருந்து நாங்கள் மீண்டு வர முடியும்” என்று கூறினார்.
ஸ்டாலினுக்கு இந்த நான்கும் சிக்கல்: என்ன செய்வார் செந்தில் பாலாஜி?
அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரிடம் பேசினோம். எக்ஸ்போர்ட் கம்பெனியில் பணியாற்றும் விஜயகுமாரின் இரு சக்கர வாகனம் நீரில் மூழ்கி பழுதானதில் அவரும் இரு வாரங்களாக பணிக்கு செல்லவில்லை. இதேபோல் சென்னை முழுக்க பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கண்ணீர் கதைகளை கூறுகின்றனர்.

மீட்பு பணிகளில் பல்வேறு தன்னார்வலர்களும் ஈடுபட்டனர். நேதாஜி இளைஞர் நற்பணி மன்றத்தினர் பல பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். பிரெட், பால் போன்ற அத்தியாவசியப் பொருள்களை விநியோகித்தனர். உதவி தேவைப்படும் பகுதிகள் குறித்த விவரங்களை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அந்த அமைப்பைச் சேர்ந்த அழகு பாண்டியனிடம் பேசினோம்.

“2015 வெள்ளம் போல் பெரிய பாதிப்பு இல்லையே என சிலர் கூறுகிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்த்தால் தான் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது தெரியும். இரு சக்கர வாகனங்கள் பல நீரில் மூழ்கிவிட்டன. இதனால் பலர் வேலைகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இரு வாரங்களாக வருமானம் இல்லை. இதிலிருந்து மீண்டு வர பல மாதங்களாகும். ஏற்கெனவே கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்கள் தற்போதுதான் மீண்டு வந்தனர். அதற்குள் இப்படியொரு துயர சம்பவம் நடந்துள்ளது. மீண்டும் கனமழை தொடரும் என்ற அறிவிப்பு சென்னை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார்.
அடுத்த இரண்டு நாள் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் கணிப்பு!
2015 வெள்ளம் சமயத்தில் சென்னை முழுக்க கடும் பாதிப்பு இருந்தது. அப்போது வெள்ள பாதிப்பால் குடிசைகளை இழந்த குடும்பங்களுக்கு குடிசை இழப்புக்கு 5,000 ரூபாய் மற்றும் சிறப்பு நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் என மொத்தம் 10,000 ரூபாய் மற்றும் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் ஒரு சேலை வழங்கப்பட்டது. குடிசைகள் மற்றும் நிரந்தர வீடுகளில் வசித்து வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு 5,000 ரூபாய், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் ஒரு சேலை வழங்கப்பட்டது.

தற்போதும் அதற்கு இணையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கடந்த முறை வழங்கப்பட்டது போல் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி