ஆப்நகரம்

கொரோனா தொற்றால் சசிகலா விடுதலை தள்ளிப் போகுமா? வெளியான முக்கிய தகவல்!

கொரோனா தொற்றால் சசிகலா விடுதலை தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் அதுகுறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 22 Jan 2021, 11:21 am
சசிகலா விடுதலை எப்போது என்ற கேள்வி கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் அரங்கில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. முன்கூட்டியே விடுதலையாவதற்கான வாய்ப்பு இருப்பதாக வழக்கறிஞர்கள் கூறிவந்த நிலையில் அதற்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை. சிறைத்துறை அறிவித்தபடி ஜனவரி 27ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் திட்டமிட்டபடி சசிகலா விடுதலை இருக்குமா தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து சிறைத் துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.
Samayam Tamil whether sasikala release will be delayed by covid positive important information released
கொரோனா தொற்றால் சசிகலா விடுதலை தள்ளிப் போகுமா? வெளியான முக்கிய தகவல்!


சசிகலா விடுதலை எப்போது?

சசிகலா திட்டமிட்டபடி விடுதலையாவாரா என்ற கேள்வி இப்போது மட்டுமல்ல சில மாதங்களுக்கு முன்னரே எழுப்பப்பட்டது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை வேறுசில வழக்குகளை காரணம் காட்டி விடுதலையாகும் நாளிலேயே கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக அப்போது தகவல்கள் வெளியாகின. ஆனால் ஜனவரி 27ஆம் தேதி அவர் விடுதலையாவது உறுதி செய்யப்பட்டது.

விடுதலையால் எதிர் தரப்பில் பதற்றமா?

சசிகலா விடுதலை அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக அதிமுகவுக்குள் புயலைக் கிளப்புமா என்று விவாதங்கள் நடைபெற்றன. 100 சதவீதம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இதே கருத்தை அமைச்சர்கள் பலரும் பிரதிபலிக்கத் தொடங்கினர். மேலும் சசிகலா விடுதலை தினத்தின் போது மீடியா கவனம் அவர் மீது குவியாமல் தடுக்க என்ன செய்யலாம் என்றும் திட்டமிடப்பட்டது.

ஜெ.நினைவிடத் திறப்பும் அதன் அரசியலும்!

சசிகலா உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனை நிர்வாகம் சொல்வது இதுதான்!

ஜெயலலிதா நினைவிடத் திறப்பு பிப்ரவரி மாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலையாகும் அதே நாளில் திறப்பு விழாவை நடத்த உள்ளனர். இதனால் அதிமுகவினர் நினைவிடத் திறப்பு விழாவில் கலந்துகொள்வார்கள், மீடியாவும் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும், சசிகலா விடுதலை குறித்த செய்தியை மழுங்கடிக்கலாம் என கணக்கு போட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

தள்ளிப் போக வாய்ப்புள்ளதா?

இதற்கிடையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் விடுதலை தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்தது. சசிகலா மட்டுமல்ல எந்தவொரு கைதிக்கும் சிறையிலிருந்து விடுதலையாவதற்கான நாள் குறிக்கப்பட்டுவிட்டால், அதிலிருந்து ஒரு நாள் கூட அவர்களை கூடுதலாக சிறையில் வைத்துக்கொள்ள சிறைத்துறை விதிகளில் இடமில்லை. அதனால் ஜனவரி 27ஆம் தேதி மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போதே, அவரை சிறையிலிருந்து விடுவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறைத் துறை வட்டாரம் சொல்லும் தகவல்!

சசிகலா சிகிச்சையில் மர்மம்; வெடிக்கும் புதிய சர்ச்சை!

சசிகலா விடுதலைக்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு, மருத்துவமனையிலேயே அவரிடம் கையெழுத்துப் பெறப்படும். அப்போதே அவருடைய பொருட்கள் அவரிடம் ஒப்படைக்கப்படும். அவருக்கு அதுவரை தரப்படும் காவல்துறை பாதுகாப்பும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும். அதன்பின் அவர் அதே மருத்துவமனையில் சிகிச்சையைத் தொடரலாம். அதனால் ஜனவரி 27 அன்று காலையில் அவரை விடுதலை செய்வதற்கு கர்நாடகா சிறைத்துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். இதில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை என சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி