ஆப்நகரம்

வேளாண் துறை யாருக்கு? அதிமுகவுக்குள் தொடங்கிய அடுத்த சர்ச்சை!

அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு வகித்த பதவி யாருக்கு என்ற போட்டி ஆரம்பமாகியுள்ளது.

Samayam Tamil 1 Nov 2020, 8:21 am
வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்த துரைக்கண்ணுவின் மறைவு அதிகமுகவுக்குள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் வேளாண்துறையை இனி யார் கவனித்துக் கொள்வது என்ற விவாதமும் அதிமுகவுக்குள் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil who is the next tn agriculture minister controversy started in aiadmk
வேளாண் துறை யாருக்கு? அதிமுகவுக்குள் தொடங்கிய அடுத்த சர்ச்சை!


முதன்முறை பெற்ற பதவி!

வேளாண் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு உயிரிழந்த நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாபநாசம் தொகுதியிலிருந்து முன்று முறை தொடர்ந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.துரைக்கண்ணுக்கு 2016ஆம் ஆண்டு முதன்முறையாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆர்.துரைக்கண்ணு அதிமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே கட்சியில் உள்ளார். தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் அவருக்கு செல்வாக்கு இருந்த காரணத்தினாலேயே மூன்று முறை தொடர்ச்சியாக வெற்றிபெற முடிந்தது. அவரது மரணம் தொகுதி மக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமும், விவசாயமும் சேரப் போகிறதா?

ஆர்.துரைக்கண்ணு வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே அவர் வகித்து வந்த துறையை இன்னொரு வன்னியர் சமூக அமைச்சருக்கே வழங்கப்பட வேண்டும் என்ற பேச்சு அதிமுகவுக்குள் எழுந்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது சட்டத்துறை அமைச்சராக இருக்கும் சி.வி.சண்முகத்திடம் அந்தத் துறையையும் வழங்கவேண்டும் என ஒரு பிரிவினர் கூறிவருகின்றனர்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி: ஆன்லைன் வகுப்புகளுக்கு குட் பை..!

இது குறித்து சி.வி.சண்முகம் காய் நகர்த்தல்களை சில நாள்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டதாக கூறுகின்றனர். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டபோது அவரது சமூகத்தைச் சேர்ந்த அமைச்சரான ஆர்.பி.உதயகுமாரிடம் அந்த பொறுப்பு வழங்கப்பட்டது. அதேபோல் சி.வி.சண்முகத்திடம் தான் வேளாண்துறையை ஒப்படைக்க வேண்டும் என்று கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்டா அரசியல்

அமைச்சர் சார்ந்த சமூகத்துக்கே பதவி கைமாற வேண்டும் என்று சொல்வது போல அமைச்சர் வாழ்ந்த டெல்டா பகுதிக்குள் தான் பதவி கைமாற வேண்டும் என சிலர் கொடி பிடிக்க ஆரம்பித்துவிட்டனர். துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மூலம் பேராவூரணி எம்.எல்.ஏ கோவிந்தராஜ், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சேகர் ஆகியோரும் அமைச்சர் பதவிக்கு அடி போட்டு வருகின்றனர். இந்நிலையில் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் அவரையும் இந்த ரேஸில் இணையுமாறு வற்புறுத்தி வருகின்றனர்.

வைத்திலிங்கம் அமைச்சராகிறாரா?

அமைச்சராக பதவியேற்பவர்கள் ஆறு மாத காலத்திற்குள் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்படவேண்டும். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் வைத்திலிங்கம் அமைச்சராக பதவியேற்கலாம் என அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். அமைச்சர் என்ற பதவியுடன் தேர்தல் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளலாம் என அவரது ஆதரவாளர்கள் ஆசை வார்த்தைகள் கூறிவருகின்றனர்.

அடுத்த செய்தி