ஆப்நகரம்

காவிரி விவகாரம்: அமித்ஷா, சோனியாவுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

கர்நாடகத்தைக் கண்டிக்க அமித்ஷா, சோனியா முன்வராதது ஏன் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

TNN 26 Sep 2016, 1:40 am
சென்னை: கர்நாடகத்தைக் கண்டிக்க அமித்ஷா, சோனியா முன்வராதது ஏன் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil why amitsha sonia had not come forward to condemn karnataka pazha nedumaran
காவிரி விவகாரம்: அமித்ஷா, சோனியாவுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: காவிரி நீரைத் தமிழகத்திற்குத் தர முடியாது என கர்நாடக சட்டமன்றத்திலும், சட்டமன்ற மேலவையிலும் தீர்மானங்கள் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒரேமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

காவிரி நீரை உடனடியாகத் தமிழகத்திற்குத் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 3 வாரத்திற்குள் மூன்று முறை ஆணைப் பிறப்பித்து விட்டது. உச்ச நீதிமன்றத்தின் ஆணையை வெளிப்படையாக மீறுவதின் மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான வகையில் கர்நாடக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஜெகதீஷ் ஷெட்டர் தீர்மானத்தை முன்மொழிய முதலமைச்சரும் காங்கிரசு கட்சித் தலைவருமான சித்தராமய்யாவின் முழுமையான ஆதரவுடன் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்திற்கும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் அறைகூவல் விடும் வகையில் கர்நாடகத்தைச் சேர்ந்த தங்களது கட்சிகள் நடந்து கொள்வதைக் கண்டிக்க பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, காங்கிரசு தலைவர் சோனியா ஆகியோர் முன்வராதது ஏன்? மற்ற அகில இந்தியக் கட்சிகளின் தலைவர்களும் வாய்மூடி மெளனம் சாதிப்பது ஏன்?

காவிரிப் பிரச்சினையில் தமிழக மக்களுக்கு எதிராகச் செயல்படும் இக்கட்சிகளைக் கண்டிக்கும் வகையில் தமிழ் நாட்டில் உள்ள உணர்வு படைத்தத் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட முன்வருமாறு வேண்டிக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி