ஆப்நகரம்

விநாயகர் சதுர்த்திக்கு வீம்பு பிடிப்பவர்கள் டாஸ்மாக் கடைகளை கண்டுக்கொள்ளாதது ஏன்?

கொரோனா காலமாக இருந்தாலும்,. விநாயகர் சதுர்த்தியை வழக்கம்போல் கொண்டாடியே தீருவோம் என்று பிடிவாதம் பிடித்துவரும் ஹிந்து அமைப்பினர், கொரோனா பரவலுக்கு முக்கிய வாய்ப்பாக கருதப்படும் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி ஏன் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Samayam Tamil 20 Aug 2020, 10:04 pm
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (ஆகஸ்ட் 22) கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி வழக்கம்போல், பொது இடங்களில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடவும், விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளை கரைக்கவும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர்.
Samayam Tamil vinayagar chaturthi


ஆனால், தற்போது கொரோனா காரணமாக உள்ளதால், பொது வழிப்பாட்டுக்கோ, ஊர்லவங்களுக்கோ அனுமதி அளிக்க இயலாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக அண்மையில் தெரிவித்துவிட்டது. இதையடுத்து விநாயகர் சதுர்த்தியை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட அனுமதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம்," மாநிலத்தில் நாள்தோறும் சராசரியாக 6,000 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுவரும் சூழலில், விநாயகர் ஊர்வலம் தேவைதானா என கேள்வியெழுப்பியதுடன், இந்த விஷயத்தில் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று கறாராக சொல்லிவிட்டது.

விநாயகர் சதுர்த்தி: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

ஆனால், அரசு உத்தரவிட்டாலும் சரி... நீதிமன்றம் என்ன சொன்னாலும் சரி... விநாயகர் சதுர்த்தியை இந்த முறையும் வழக்கமான நடைமுறையில் கொண்டாடியே தீருவோம் என்பதில் ஹிந்து அமைப்புகள் தீர்மானமாக உள்ளன. தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலையை நிறுவப்படும் என்று ஹிந்து அமைப்புகள் பகிரங்கமாக தெரிவித்துள்ளதில் இருந்தே இதனை நாம் நன்கு அறியலாம்.

அத்துடன், தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள் மூலம் பரவாத கொரோனா, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதால் பரவிடுமா என்றும் ஹெச். ராஜா போன்றவர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றனர்.

ஹிந்து அமைப்பினரின் இந்த கேள்விக்கு, "விநாயகர் சதுர்த்தி விழாவையையும், டாஸ்மாக் கடையையும் ஒப்பிடுவது சரியா" என்ற எதிர்கேள்வி பொதுமக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகிறது.

அத்துடன், டாஸ்மாக் கடைகளுக்கு ஆண்கள் மட்டுமே செல்கின்றனர். ஆனால், சதுர்த்தி விழாவையொட்டி, பொது இடங்களில் விநாயகரை பிரதிஷ்டை செய்தால் அதனை அனைத்து தரப்பு வயதினரும் வழிபடதான் செய்வார்கள். இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதை இவர்கள் அறிவார்களா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்திக்கு 1.5லட்சம் சிலைகள் வைக்கப்படும்: நீதிமன்ற எச்சரிக்கையை மதிக்காத இந்து முன்னணி!

மேலும், டாஸ்மாக் கடைகளை கைகாட்டி, விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி கேட்கும் ஹிந்து அமைப்பினர், கொரோனா பேரிடர் காலத்தில் ஒட்டுமொத்த சமூகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள டாஸ்மாக்கை மூட சொல்லி, அரசுக்கு எதிராக ஏன் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

இதேபோன்று, தென்மாவட்டங்களில் மிகவும் பிரபலமான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், ஆடி தபசு என எந்தவொரு விழாவும், கொரோனா காரணமாக இந்தமுறை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படவில்லை. அந்த விழாக்களுக்கெல்லாம் குரல் கொடுக்காத ஹிந்து அமைப்புகள் விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் ஏன் வீம்பு பிடிக்கின்றன என்ற கேள்வியையும் நெட்டிசன் முன்வைக்கின்றனர்.

அடுத்த செய்தி