ஆப்நகரம்

ஏன் இவ்வளவு அக்கறை: பாரிவேந்தர் அறிக்கை

எஸ்ஆர் எம் பல்கலைக்கழக விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவரும், எஸ்ஆர் எம் குழும தலைவருமான பாரிவேந்தர் கடுமையாக சாடியுள்ளார்.

TNN 31 Jul 2016, 1:15 pm
சென்னை: எஸ்ஆர் எம் பல்கலைக்கழக விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவரும், எஸ்ஆர் எம் குழும தலைவருமான பாரிவேந்தர் கடுமையாக சாடியுள்ளார்.
Samayam Tamil why this much care parivendhar statement
ஏன் இவ்வளவு அக்கறை: பாரிவேந்தர் அறிக்கை


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழ்ச் சமூகம் சமீப காலமாக சந்தித்து வருகின்ற பின்னடைவுகளில் ஒன்று, தன்னைத்தானே சமூகக் காவலனாகப் பறை சாற்றிக் கொள்ளும் சிலரின் மிரட்டல் அரசியல்தான்.

விஜயகாந்த் தொடங்கி ரஜினிகாந்த் வரை தனது வறட்டு மிரட்டல்களால் 'புகழ் பெற்ற' மருத்துவர் ராமதாஸ், எமது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக விவகாரத்தில், தானே புலன் விசாரணை செய்து, தானே தண்டிக்கும் தலைமை நீதிபதி ஆகத் துடிக்கின்ற அவலம், அடிக்கடி ஊடகங்களில் அவருடைய வன்ம அறிக்கைகளின் மூலமாக வெளிவருகின்றன.

ஒத்துப் போகின்ற இரு சமூகங்களின் இணக்கத்தை இழந்துவிடக் கூடாது என்று நாம் அமைதியாக இருப்பதை அவர் ஒருவேளை கோழைத்தனம் என்று முடிவு செய்துவிட்டார் போல. நீதிமன்ற விசாரணையில் நடக்காதவை எல்லாவற்றையும் நடந்ததாகத் தனது வெற்று ஒற்றர் படை தந்த தகவல்களின் அடிப்படையில், மருத்துவர் அவர்கள் நீதிமன்றத்துக்கும் காவல்துறைக்கும் கட்டளை இடுகின்ற வேலையை மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் புலன் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணைகளின் போக்கில் சட்டவிரோதமான இடையூறுகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

யாரோ ஏமாற்றிவிட்டுப் பணத்துடன் பதுங்கிய ஒருவரைக் கண்டுபிடிக்க முயலும் காவல்துறையைக் கொச்சைப்படுத்தும் நீங்கள், நான் ஏற்கெனவே கேட்டும் “இன்டெக்ஸ்” மருத்துவக் கல்லூரி வழக்கில், சி.பி.ஐ. விசாரித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை முட்டி மோதி நிற்கின்ற தகவலைத் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏன் இன்னமும் தரவில்லை? தனது இன மக்களையே சுரண்டிப் பெருத்த ராமதாஸ், நில மோசடி விவகாரம் குறித்துத் தனது மகளிடம் காவல்துறை நடத்திய விசாரணை குறித்து, இன்னும் ஏன் இதுபோன்ற காரசாரமான விஷயங்களில், பொதுநலன் சார்ந்து கொப்புளிக்கவில்லை?

உண்மை என்ன என்பதை உரக்கச் சொல்ல வேண்டும் என்ற உணர்விலேயே இந்த வழக்கைச் சந்தித்து வருகிறோம். கை நீட்டி வாங்கிய ஈரம் காயும் முன்பே கொடுத்த கரங்களைக் கொச்சைப்படுத்தும் மருத்துவர் அவர்கள் காவல்துறையைப் பார்த்து செஞ்சோற்றுக் கடன் என்று சொல்லிக் கறை பூசுகிறார்.

ஒரு வழக்கு புலன் விசாரணையை நியாயமாக நடக்கவிடாமல் திசை திருப்பும் எண்ணத்துடன் தொடர்ந்து காவல்துறை மற்றும் நீதித் துறை மீது களங்கம் கற்பிக்கும் ராமதாஸ் அவர்கள் மீது காவல் துறையும், நீதித் துறையும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி