ஆப்நகரம்

எனக்கு இல்லைனா உனக்கும் இல்ல: பாஜகவின் வீம்பு பாலிடிக்ஸ்?

தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தல் ஏன் தனித்தனியாக நடத்தப்படுகிறது என்பதற்கு முக்கிய காரணம் ஒன்றை கூறுகிறார்கள்.

Samayam Tamil 23 Aug 2021, 8:24 am
தமிழ்நாட்டுக்கான மூன்று மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. முகமது ஜான் மறைவைத் தொடர்ந்து ஒரு இடமும், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்ததால் இரு இடங்களும் என மூன்று இடங்கள் காலியாக உள்ளன. இந்த மூன்று இடங்களுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றால் எம்.எல்.ஏக்களின் வலிமையை பொறுத்து திமுகவுக்கு இரு இடங்களும், அதிமுகவுக்கு ஒரு இடமும் கிடைக்க வாய்ப்பிருந்தது. ஆனால் தனித்தனியாக தேர்தல் நடத்தினால் மூன்று இடங்களும் திமுகவுக்கு தான்.
Samayam Tamil bjp aiadmk


அதிமுக சார்பில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தேர்தலை ஒரே நேரத்தில் வைக்க டெல்லியை வலியுறுத்தினர். திமுக சார்பில் டி.ஆர்.பாலுவோ காலியான காலத்தின் அடிப்படையில் தனித்தனியாக நடத்த வலியுறுத்தினார். அதிமுக - பாஜக கூட்டணியில் இருப்பதால், பாஜகவுக்கு மாநிலங்களவையில் பலம் குறைந்துள்ளதால் கண்டிப்பாக மூன்று இடங்களுக்கும் சேர்த்துதான் தேர்தல் நடைபெறும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் முகமது ஜான் இடத்துக்கு மட்டும் தனியாக தேர்தல் அறிவித்தது தேர்தல் ஆணையம்.
வெளிநாடு பறக்கும் விஜயகாந்த்: உள்ளாட்சியில் எந்த கூட்டணி?
திமுகவுக்கு இந்த சீட் உறுதி என்பதால் அக்கட்சி மட்டும் வேட்பாளரை அறிவித்தது. திமுகவில் வெளிநாடு வாழ் தமிழர் நலன் அணியின் செயலாளராக உள்ள அப்துல்லாவை திமுக அறிவித்துள்ளது.
பாஜக அரசு சிஏஏ உள்ளிட்ட முக்கிய சட்டங்களை அதிமுக கூட்டணியின் உதவியோடுதான் மாநிலங்களவையில் நிறைவேற்றியது. அப்படியிருக்க ஒரு மாநிலங்களவை இடத்துக்கான வாய்ப்பு இருந்தும் ஏன் அதை தட்டிக்கழித்தது என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பின்னால் ஈகோ தான் இருப்பதாக கூறுகிறார்கள்.
பல்கலைக் கழகத்தில் நடந்த முதலிரவு: வீடியோவால் ஷாக்கான அதிகாரிகள்!
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் அண்மையில் ஒன்றிய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆறு மாத காலத்துக்குள் அவர் மாநிலங்களவையிலோ, மக்களவையிலோ உறுப்பினராக வேண்டும். அந்த வகையில் ஒரு மாநிலங்களவை இடத்தை பாஜக அதிமுகவிடம் கேட்டதாக கூறுகிறார்கள். அதற்கு அதிமுக தலைமை மறுத்துவிட்டதாம். அந்த கோபத்தில்தான் எங்களுக்கு கிடைக்காத இடம் உங்களுக்கும் வேண்டாம் என்று தேர்தலை தனித்தனியாக நடத்தி அந்த ஒரு இடத்தையும் திமுகவுக்கு தாரை வார்த்துவிட்டதாம் பாஜக.

அடுத்த செய்தி