ஆப்நகரம்

முரண் அரசியல்: புதுச்சேரியில் ட்ரைலர்; அதிமுகவை வேட்டையாடும் பாஜக!

கடற்கரை ஒட்டிய புதுச்சேரியில் அதி தீவிர புயலை ஏற்படுத்தி, இப்போது தமிழகத்தில் நிலை கொண்டிருக்கிறது பாஜக என்ற புயல்

Samayam Tamil 26 Feb 2021, 8:17 pm
தமிழக சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைப்பது பாஜகவின் ஆசியோடுதான் என்பதற்கான ட்ரைலர் இந்த புதுச்சேரி சம்பவம் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். பல மாநிலங்களில், மாநிலக் கட்சிகளுக்குள் இருக்கும் முரண்களை தங்களுக்கு எப்படி சாதகமாகப் பயன்படுத்தி அங்கெல்லாம் ஆழமாக பாஜக வேர் ஊன்றியதோ அதே பாணியைத்தான் தற்போது தென் மாநிலங்களான புதுச்சேரியிலும், தமிழகத்திலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். பாஜகவின் மூலதனமே முரண்களில் அரசியல் செய்வதுதான் என்பதற்கு டிஜிட்டல் இந்தியாவில் சான்றுகள் தேவையில்லை.
Samayam Tamil will bjp hunt aiadmk contradiction politics
முரண் அரசியல்: புதுச்சேரியில் ட்ரைலர்; அதிமுகவை வேட்டையாடும் பாஜக!



நாரயணசாமி முதல்வரான கதை

காங்கிரஸ் எம்.எல்.ஏ. நமச்சிவாயம் தான் அப்போது புதுச்சேரியின் முதல்வர் வேட்பாளர். அந்த நேரத்தில் இரு எம்.எல்.ஏ-க்கள் துணை முதல்வர் பதவி கேட்க, யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு துணை முதல்வர் தேவையா? என்ற கேள்வியோடு, இவர்கள் மூவருக்கும் மீடியேட்டராக வேலை பார்த்து பஞ்சாயத்து பேச டெல்லி சென்ற நாராயணசாமி, அங்கிருந்து திரும்புகையில் முதல்வராக வருகிறார். இது போன்ற காரணங்களால் நமச்சிவாயம், நாராயணசாமிக்கு இடையே இருக்கும் முரணைப் பயன்படுத்தி, ‘பாஜகவிற்கு வந்தால்… நீங்கள்தான் முதல்வர்’ என்று நமச்சிவாயத்திடம் பாஜக சொல்ல, அவரும் அங்குத் தாவி இன்று பாஜகவிற்காக படுஜோராக புதுச்சேரியில் வேலை செய்து வருகிறார். ஆட்சியும் கலைக்கப்பட்டு, ஆளுநர் ஆட்சியும் அரங்கேறியுள்ளது.

கிரவுண்ட் லெவல் கேடர்

தமிழகத்தைப் பொறுத்தவரைத் திராவிட எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு என்பது சமீப காலமாகத் தலித் அறிவுஜீவிகள் மத்தியில் புரையோடியுள்ளது. பொதுவாக திமுக, அதிமுக, காங்கிரஸ்… என எல்லா அரசியல் கட்சிகளிலும் கிரவுண்ட் லெவல் கேடர் இங்கு இருப்பவர்கள்தான். அவ்வாறு இருக்கும் கிரவுண்ட் லெவல் கேடர் மத்தியிலேயே தலைவர்களை உருவாக்கி விட்டால், ஏதோ ஒரு கட்சிக்குக் கூலிக்கு வேலை செய்வதாக நினைக்க மாட்டார்கள், தன்னுடைய கட்சிக்கு வேலை செய்வதாக நினைப்பார்கள். அதைத்தான் பாஜக செய்து வருகிறது. அதற்காக வேலை செய்யவும் அந்த கேடர்கள் தயாராகவும் இருக்கிறார்கள். இது ஒரு வகையில் அதிகாரத்தில் இல்லாதவர்களை அதிகாரப்படுத்துவது போன்ற ஒரு மாய தோற்றமாக இருந்தாலும், அந்த அதிகாரத்தினை அனுபவிப்பவர்கள் அவர்களாக இருப்பதில்லை. இதுவும் ஒரு முரண் தான்.

ரிசர்வ் தொகுதியை கண் வைக்கும் பாஜக

இதன் அடிப்படையில்தான் வரும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் குறைந்தது ஐந்து இடமாவது ரிசர்வ் தொகுதியில் நிற்பதற்கு பாஜக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு தொகுதி அரூர். கடந்த 2016 சட்ட மன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நல கூட்டணியில் தனியாக நின்று 33,632 ஓட்டுகள் பெற்றது. வரும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதே தொகுதியினை திமுக கூட்டணியிலும் கேட்டு கொண்டிருக்க, பாஜக அருந்ததியர் சமூக வேட்பாளரை களம் இறக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு அமைப்பின் பலமும், தலித்துகளின் வாக்குகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இங்கு இருந்தாலும், மற்ற சமூகத்தினர் வாக்கு என்பது மாற்று சமூகத்தினரை நிறுத்துவதன் மூலமே தமக்கு கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவை பாஜக எடுத்துள்ளது என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில். குறிப்பாக விசிகாவின் பல சாதி போராட்டங்களில் முரண்பட்டுள்ள தலித் அல்லாத சாதி ஆதிக்கத்தின் வாக்குகளை பெறுவது இதன் உள் நோக்கம்.

தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழகத்தில் அமலுக்கு வந்த நடத்தை விதிகள் என்னென்ன?

அதிமுக-அமமுக இணைப்பு

இதற்கடுத்து தமிழகத்தின் மற்றொரு முரணையும் நீண்ட நாட்களாக பாஜக கையாண்டு வருகிறது. இப்போது அதற்கும் ஒரு முடிவு செய்வதற்கான நேரம் வந்துள்ளது. அதிமுக, அமமுக இணைப்புதான் அது. அதிமுகவும் அமமுகாவும் ஒன்று சேர்ந்தால், அந்த ஒற்றுமை என்பது காலபோக்கில், இந்த ஐந்து ஆண்டுகளுக்கு இல்லாதது போல், பழைய அதிமுகவின் அளவிற்கு ஒற்றுமையை பலப்படுத்துவதற்கான வாய்ப்பாகிவிடுமோ என்று யோக்கிறது பாஜக. மாநில நலன், கட்சியின் நிரந்தர வளர்ச்சி, தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருப்பது… போன்ற கருத்தோட்டங்கள் பல தலைவர்களிடம் செல்வாக்கு செலுத்துவதினால், பாஜக சொல்லும் சொல்லை கேட்பதற்கு சசிகலாவோ, மற்றவர்களோ தயாராக இல்லாமல் சொந்த பலத்தை நிலை நாட்டிக் கொள்வார்களோ என்ற கேள்வியும் பாஜக மத்தியில் எழாமல் இல்லை.

அதிமுகவை வேட்டையாடும் பாஜக

எனவே எருதுகளை பிரித்து வேட்டையாடிய சிங்கத்தை போல் அதிமுக-வை தனித்தனியாக பிரித்து வைத்திருப்பதைத்தான் பாஜக விரும்புகிறது. அதிமுக, அமுமுக இணைவதற்கு பல்வேறு உடன்படிக்கைகள் எட்டப்பட்ட பிறகும்கூட பிரதமர் மோடி சம்மதித்தாலும், உள்துறை அமைச்சரும், பாஜகவின் மைக்ரோ பால்டிக்ஸின் நாயகனாக அறியப்படும் அமித்ஷா தரப்பு இதற்கு ஒத்துகொள்ளவில்லை என்கிறது டெல்லியில் இருந்து வரும் செய்திகள். நீண்ட நாட்கள் அடிப்படையில் அதிமுகவை பிரித்து வைப்பதுதான் தங்களின் வளர்ச்சிக்கு உகந்தது என்பது பாஜகவின் ராஜதந்திரமாக இருக்கிறது.

பாஜக முரண் அரசியல்

எப்படி பஞ்சாப், கர்நாடகா போன்ற பதினேழு மாநிலங்களில், அங்கிருந்த மாநில கட்சிகளுக்குள் உட்புகுந்து, அவர்களுக்குள் இருக்கும் முரண்களை கையாண்டு; அந்த கட்சிகளை காணாமல் செய்து; பாஜகவினை வளர்த்தெடுக்கஅந்த தலைவர்களை எல்லாம் பாஜகவின் தலைவர்களாக மாற்றியதோ, அதே போன்றதொரு தலைமையைத்தான் தற்போது புதுச்சேரியிலும் அமைத்திருக்கிறது. இந்த நிலை தமிழகத்திலும் நடக்குமா, இதற்கு தமிழக அரசியல் களம் கைகொடுக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

அடுத்த செய்தி