ஆப்நகரம்

38 வருஷம் ஆச்சு... மீண்டும் திரும்பிய ஈவிகேஸ்... திருப்புமுனை ஏற்படுத்துமா ஈரோடு கிழக்கு?

பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஈரோடு கிழக்கு திருப்புமுனையாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 24 Jan 2023, 12:06 pm
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா. இவர் மாரடைப்பால் திடீரென உயிரிழந்ததால் இடைத்தேர்தல் நடத்தும் சூழல் உருவானது. வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இம்முறை திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil EVKS Elangovan


காங்கிரஸ் வேட்பாளர்

இதில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அல்லது அவரது இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடலாம் எனக் கூறப்பட்டது. சமீபத்தில் தான் போட்டியிடவில்லை என்றும், மகன் சஞ்சய் சம்பத்துக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
யாருக்கு இரட்டை இலை? பின்னால் ஓடும் அதிமுக... வரலாற்றை மாற்றிய ஈரோடு கிழக்கு!
பிரச்சாரக் களம்

ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனே போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் ஏற்கனவே பிரச்சார களத்தில் இறங்கிவிட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் விரைவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

யார் இந்த ஈவிகேஸ் இளங்கோவன்?

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தந்தை பெரியாரின் பேரன் ஆவார். அதாவது பெரியாரின் அண்ணன் மகன் கிருஷ்ணசாமி. இவரது மகன் ஈ.வி.கே.சம்பத் மற்றும் சுலோச்சனா தம்பதிக்கு மகனாக பிறந்தவர் தான் ஈவிகேஸ் இளங்கோவன். 21.11.1948ல் பிறந்த இளங்கோவனுக்கு தற்போது 75 வயது. ஆரம்ப கல்வியை ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் பயின்றார். பின்னர் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் படித்தார்.

வகித்த பதவிகள்

இதனைத் தொடர்ந்து சென்னை மாநில கல்லூரியில் பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும் போதே காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி செயலாளராக இருந்தார். தொடர்ந்து ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஈரோடு மாவட்ட தலைவர், மாநில பொதுச் செயலாளர், தமிழக காங்கிரஸ் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தார்.

சட்டமன்ற & நாடாளுமன்ற தேர்தல்

முதல்முறை 1984ஆம் ஆண்டு சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். இதனைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சராகவும்,
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய பார்வட் ப்ளாக் ஆதரவு!
மத்திய அமைச்சர் பதவி

பின்னர் வணிகம் மற்றும் தொழில்கள் துறை இணை அமைச்சராகவும், ஜவுளி துறை இணை அமைச்சராகவும் பணியாற்றினார். 2009ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியிலும், 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூரிலும், 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

மீண்டும் சட்டமன்றத்திற்கு

இந்நிலையில் 38 ஆண்டுகளுக்கு பிறகு எம்.எல்.ஏ தேர்தலில் களம் காண்கிறார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தனது மனதில் பட்டதை தைரியமாக சொல்லக் கூடியவர். இந்நிலையில் வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு திருப்புமுனையாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
எழுத்தாளர் பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி