ஆப்நகரம்

சென்னை தவிர பிற இடங்களில் பொது போக்குவரத்தா? முதல்வர் ஆலோசனை!

பொது முடக்கம் நீக்கப்படுமா, நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்று முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

Samayam Tamil 29 Jul 2020, 7:49 am
பொது முடக்கம் ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா, அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பதுதான் அனைத்து தரப்பினரின் கேள்வியாக உள்ளது. ஒவ்வொரு முறை பொது முடக்கம் முடிவுக்கு வரும்போதும் முதல்வர், அதிகாரிகள் குழு, மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்வார். அந்த ஆலோசனைக் கூட்டங்களில் விவாவதிக்கப்படும் கருத்துக்களின் அடிப்படையிலேயே முதல்வர் உத்தரவுகளைப் பிறப்பிப்பார்.
Samayam Tamil will public transport be allowed in places other than chennai


இந்நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பொது முடக்கத்தில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பது குறித்து இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

பொது முடக்கத்தால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்த சூழலில் மீண்டும் தொழில் நிறுவனங்கள் இயங்க வட மாநிலத் தொழிலாளர்களை அனுமதிக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன. வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வருவது தொடர்பாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசுக்கு வழிகாட்டு நெறிமுறைகளையும் அளித்துள்ளது.

ரஜினி இ பாஸ் வாங்கினார், ஆனா எங்கட்ட இல்ல: மாநகராட்சி ஆணையர்!

இந்த சூழ்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க பொதுப் போக்குவரத்தை உடனடியாக இயக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. பொது முடக்கத்தால் மட்டும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது என உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது அதிகமாக பேசப்படுகிறது. கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட அரசுகள் பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவித்துள்ளன. ஆனால் மேற்கு வங்க மாநிலம் அடுத்த மாதம் முழுவதும் பொது முடக்கம் அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

விடிய விடிய வெளுத்து வாங்கும் மழை: மக்கள் ஹேப்பி அண்ணாச்சி!

இந்நிலையில் சென்னையைத் தவிர்த்து பிற இடங்களில் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பில் சென்னைக்கும் பிற மாவட்டங்களுக்குமான வித்தியாசம் பெரியளவில் குறைந்துவருவது இந்த முடிவுக்கு எதிராக அமைய வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது இதில் தமிழ்நாடு அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது தெரியவரும்.

அடுத்த செய்தி