ஆப்நகரம்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய்? - தமிழக அரசு புதிய முடிவு!

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தமிழக அரசு முக்கிய முடிவொன்றை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 5 Dec 2022, 1:11 pm
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் தமிழக அரசு பரிசுப் பொருள்களை வழங்கி வருகிறது.
Samayam Tamil tn pongal gift


பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன், ரூ.1000 ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு வந்தது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது அதிமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூ.2500 வழங்கப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஆண்டு, தைப் பொங்கலுக்கு ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக, கரும்பு, நெய் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மொத்தம் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

அதிமுகவில் நடக்க உள்ள மாற்றம்: டெல்லி சென்றால் வழி பிறக்குமா?

ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது பொதுமக்களை ஏமாற்றமடைய செய்தது. எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்தன. பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம் பெற்றிருந்த மளிகைப் பொருட்கள் தரமற்றதாக இருந்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்.

இதனிடையே, 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.1000 ரொக்கம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பொருள்களை விட ரொக்கப் பணத்தையே மக்கள் எதிர்பார்ப்பதாக கூறப்படும் நிலையில் தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்கவும் 1000 ரூபாய் கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் 1000 ரூபாயை ரேஷன் கடைகள் மூலம் கைகளில் கொடுப்பதைவிட வங்கி கணக்கில் வரவு வைத்துவிடலாமா என்று ஆலோசனை நடைபெற்றுள்ளதாம். எனவே ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளார்களாம். ஆனால் இந்த பொங்கல் பண்டிகைக்குள் இதை முடிப்பதற்கு சாத்தியமில்லையாம்.

இந்த சூழலில் தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி ஒன்று கவனம் பெற்று வருகிறது.
நாற்பதையும் தட்டி தூக்குவோம்: சூளுரைத்த எடப்பாடி ஆதரவாளர்கள்!
“தமிழ்நாட்டில் 2 கோடியே 23 லட்சம் ரேஷன் அட்டை தாரர்கள் உள்ளனர். இதில், 14 லட்சத்து 86 ஆயிரம் ரேஷன்கார்டுதாரர்கள் மட்டுமே ரேஷன் அட்டையில் வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைக்காமல் உள்ளனர். இவர்களில் 95 சதவீதம் ரேஷன் கார்டுதாரர்கள் இணைக்கப்பட்டு உள்ள நிலையில் மீதம் உள்ளவர்களை இணைக்கும் பணி நடக்கிறது. ரேஷன்கார்டு தாரர்களுக்கு வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை. ரேஷன் கார்டில் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்கிற எண்ணம் இல்லை” என்று கூட்டுறவுத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

வங்கி எண்ணை இணைப்பது தொடர்பாக ராதாகிருஷ்ணன் பேசியுள்ளது பொங்கல் பரிசாக 1000 ரூபாய் ரொக்கம் வழங்குவதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளதாக செய்திகள் றெக்கை கட்டி பறக்கின்றன.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி