ஆப்நகரம்

வேலூரில் குடிசை வீடுகளில் தீவிபத்தால் பயங்கரம்; மூதாட்டி பலி - காப்பாற்ற முயற்சித்த மகன் படுகாயம்!

அருகருகே அமைந்த 3 வீடுகளில் ஏற்பட்ட தீவிபத்தால், ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TIMESOFINDIA.COM 26 Apr 2019, 8:34 pm
வேலூர் மாவட்ட ராணிப்பேட்டையில் இன்று அதிகாலை 1 மணியளவில் குடிசை வீடு ஒன்றில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இது மளமளவென எரியத் தொடங்கியது. உடனே அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவியது.
Samayam Tamil Vellore Fire Accident


அடுத்தடுத்த 3 வீடுகளுக்கு பரவியதால், அதில் தங்கியிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு வீட்டில் சாந்தி(70) என்ற மூதாட்டியும், அவரது மகன் ராஜ்குமார்(35) இருந்துள்ளனர். சாந்தியின் மகள் சுகுணா, உறவினர் வினோத் குமார் ஆகியோர், மற்ற இரு வீடுகளில் இருந்தனர்.

தீ பெருமளவு பரவத் தொடங்கியதால், சாந்தி மற்றும் ராஜ்குமார் வெளியேற முயற்சித்தனர். ஆனால் சாந்தி கீழே விழுந்துள்ளார். அப்போது அவரது சேலையில் தீ பற்றிக் கொண்டது. அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட ராஜ்குமார் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், வீட்டிற்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த ராஜ்குமார், வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த தீவிபத்தில் மூன்று குடிசை வீடுகளும் சேதமடைந்தன. சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி