ஆப்நகரம்

போலீசுக்கு பயந்து கீழே கிடந்த மாஸ்கை எடுத்து பயன்படுத்திய இளைஞரால் பரவிய கொரோனா!

போலீஸாருக்கு பயந்து கீழே கிடந்த மாஸ்க்கை எடுத்து உபயோகப்படுத்திய இளைஞர் உள்பட அவரது குடும்பதினர் அனைவருக்கும் கொரோனா பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 28 Jun 2020, 5:06 pm
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு தளர்வுகளுடன் நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. எனினும், கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதேசமயம், சரீர விலகல், கைகளை சோப்பு அல்லது சானிடைசர்கள் போட்டு கழுவுவது, முகக்கவசம் அணிவது உள்ளிட்டவைகளே தீர்வாக உள்ளன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


பொது இடங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என அறிவித்துள்ள தமிழக அரசு, அதனை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோடிக்கணக்கான ரூபாய் அபராதமாக மாநிலம் முழுவதும் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி சிவராஜ் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் (65), மனைவி (60), 20, 19 வயதான இரண்டு மகன்கள், 15 வயதான ஒரு மகள் என ஐந்து பேருக்கு கடந்த 22ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு தொற்று பரவியது குறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

திமுக, 4வது எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி!

அதன்படி, காட்பாடி ஓடப்பிள்ளையார் கோவில் தெருவில் அக்குடும்பத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசாரை பார்த்து அபராதம் விதித்து விடுவார்களோ என பயந்து, அங்கு கீழே கிடந்த முகக்கவசத்தை எடுத்து பயன்படுத்தி உள்ளார். அந்த முகக்கவசத்தினால் அந்த இளைஞருக்கும், அவரது மூலம் அவரது குடும்பத்தில் உள்ள 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

முகக்கவசத்தை பயன்படுத்துவது குறித்து ஏராளாமான அறிவுறுத்தல்களை அரசு வழங்கி வருகிறது. அவற்றை பயன்படுத்தி பிறகு கண்ட இடங்களில் தூக்கி எரியாமல் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். ஒருவர் பயன்படுத்திய முகக்கவசத்தை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு முறையும் அதனை துவைத்து கிருமி நாசம் செய்து பயன்படுத்த வேண்டும் என அரசு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், இளைஞரின் விழிப்புணார்வற்ற செயலால் இத்தகைய அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி