ஆப்நகரம்

'இது என்ன மாடல் சாலை?' - தஞ்சாவூர் தார் சாலை ஷாக்!

தஞ்சாவூர் மாவட்டம், தென்னூர் பகுதியில் சாலை விரிவாக்க பணியின் போது மின் கம்பங்களை சாலைக்கு நடுவே வைத்து பணிகள் நடந்துள்ள சம்பவம் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 18 Aug 2022, 10:59 am
தஞ்சாவூர் மாவட்டம் தென்னூர் பகுதியில் தஞ்சாவூர் - கும்பகோணம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், தென்னூர் பகுதியில் வளைவாக இருந்த சாலையை நேராக மாற்றும் பணியின் போது சாலையின் குறுக்கே இருந்த மின்கம்பங்களை அகற்றாமல் சாலையின் நடுவே விட்டுவிட்டு இருபுறமும் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil thanjavur road issue
சாலைக்கு நடுவே உள்ள மின் கம்பங்கள் புகைப்படம்


இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக இரவு நேரத்தில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குவதற்கு முன்பு மின் கம்பங்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள மக்கள், அதிகாரிகள் இவ்வளவு அலட்சியமாகவா செயல்படுவார்கள் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

சாலை அமைப்பதற்கு முன்பு மின்வாரியம் கம்பங்களை அகற்றியிருக்க வேண்டும் அப்படி இல்லை எனில் அவர்கள் அகற்றும் வரை சாலை அமைக்கும் பணியை செய்திருக்க கூடாது என்று கருத்து தெரிவித்துள்ள தென்னூர் பகுதி வாசிகள் மக்கள் வரிப்பணத்தில் அதிகாரிகள் விளையாடுகின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூரில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியின் போது அடி பம்பு ஒன்றை அகற்றாமல் சாலை போடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல் இந்த சாலை அமைக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்தாரர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அடுத்த செய்தி