ஆப்நகரம்

தேனி வனப்பகுதியில் கான்கிரீட் கழிவுகள் கொட்டி நாசம்: வெறும் 10 ஆயிரம்தான் ஃபைன்!

தேனி மாவட்ட வனப்பகுதியில் கட்டிட கழிவு கொட்டிய இரு கட்டுமான நிறுவனங்களுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Samayam Tamil 14 Oct 2021, 5:48 pm
தேனி மாவட்டத்தின் மையப் பகுதியில் செல்லும் பைபாஸ் சாலை இரு புறங்களிலும் அமைந்துள்ளது வால்கரடு வனப் பகுதி. சுமார் 300 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த வனப் பகுதியில் முயல், மயில் உள்ளிட்ட சிறிய வகை வன விலங்குகளும், பறவை இனங்களும் வாழ்கின்றன.
Samayam Tamil தேனி வனப்பகுதியில் கான்கிரீட் கழிவுகள் கொட்டி நாசம்: வெறும் 10 ஆயிரம்தான் ஃபைன்!


இந்த சூழலில் சமீப காலமாக வால்கரடு பகுதிகளில் கட்டிட கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவதாக வனத் துறையினருக்கு தொடர் புகார் வந்து குவிந்தது. இந்த கழிவுகள் கொட்டப்படுவதால் வனவளம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து தேனி மாவட்ட வன அலுவலர் வித்யா உத்தரவின் பேரில், தேனி வனச் சரகர் சாந்தகுமார் தலைமையில் வனத் துறையினர் வால்கரடு வனப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, சில இடங்களில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டிருந்தை கண்டு பிடித்தனர். அதைத் தொடர்ந்து வனத் துறையினர் இந்த குப்பைகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

தீபாவளிக்கு தள்ளுபடி விலையில் தேனி கலெக்டர் சட்டை வாங்கிய செய்தி!
விசாரணையில், தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் இரு கட்டுமான நிறுவனங்கள் கட்டிட கழிவுகளை லாரிகள் மூலம் வால்கரடு வனப் பகுதிக்கு கொண்டு வந்து கொட்டி வருவது தெரியவந்தது.

இதையடுத்து இரு கட்டுமான நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு வனச்சட்டம் 1882 இன் படி தலா ரூபாய் 10 ஆயிரம் வனத் துறையினர் அபராதம் விதித்தனர்.

தொடர்ந்து வால்கரடு வனப் பகுதி கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வன வளம் பாதிக்கப்படும் வகையில் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், வனப் பகுதியில் கழிவுகள் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என தேனி வனச் சரகர் சாந்தகுமார் தெரிவித்தார்.

அடுத்த செய்தி