ஆப்நகரம்

மலைவாழ் மக்களை வெளியேற்ற திமுக அரசுத் திட்டம்: தங்க தமிழ்ச்செல்வன் போட்ட குண்டு!

ஆதிவாசி, பழங்குடியின மக்களுடன் ஆட்சியர் மற்றும் வன அதிகாரியைச் சந்தித்த பின் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 27 Jul 2021, 7:49 pm
தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது அகமலை ஊராட்சி. 16 மலைக் கிராமங்களைக் கொண்டது. ஊராட்சி நிதி 28 லட்சம் மூலம் சோத்துப்பாறை முதல் கரும்பாறை வரை 13 கிலோ மீட்டர் தூரத்திற்குச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக 800 மீட்டர் சிமெண்ட் சாலை அமைக்கக் கடந்த சில வாரங்களுக்கு பணிகள் தொடங்கப்பட்டது.
Samayam Tamil மலைவாழ் மக்களை வெளியேற்ற திமுக அரசுத் திட்டம்: தங்க தமிழ்ச்செல்வன் போட்ட குண்டு!


சில நாட்கள் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தினர். ஏன் பணிகள் நிறுத்தப்பட்டது என வனத்துறையிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு வனத்துறை, அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட சில கிராமங்களில் வாழ்ந்து வரும் ஆதிவாசி, பழங்குடியின மலைக் கிராம மக்களை வேறு இடங்களுக்கு மாற்றும் திட்டம் அரசிடம் உள்ளதாகவும் அதனால் சாலை அமைக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்ததாக திமுக தேனி மாவட்ட அமைப்பினர் கூறுகின்றனர்.

இந்நிலையில் அகமலை ஊராட்சிக்குட்பட்ட மலைவாழ் மக்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் தலைமையில் மேகமலை வன உயிரின காப்பாளர் மற்றும் தேனி மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) சுமேஷ் சோமன், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஆகியோர்களிடம் தங்களது கோரிக்கை மனு அளித்தனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்செல்வன், ஊரடி, ஊத்துக்காடு உள்ளிட்ட மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை அங்கிருந்து வெளியேற்றி, வேறு பகுதிகளில் குடியமர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இப்படி வெளியான தகவலையடுத்து அங்கு நடைபெற்று வந்த சாலைப்பணிகளுக்கான அனுமதியை வனத்துறையினர் ரத்து செய்தனர்.

வனத்துறையினர் தகவல் குறித்து மாவட்ட ஆட்சியர் தெளிவு படுத்திவிட்டால் சாலைப் பணிகளுக்கான அனுமதி வழங்க இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்ததாக அவர் கூறினார். அரசு சார்பில் வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வரும் மலை வாழ் மக்களை அங்கிருந்து வெளியேற்றக் கூடாது என அவர் கோரிக்கை விட்டுள்ளார்.

அடுத்த செய்தி