ஆப்நகரம்

தேனி: விவசாய நிலத்தில் முறைகேடு... கல்குவாரி மீது பாயுமா நடவடிக்கை?

தேனி அருகே விவசாய நிலங்களை முறைகேடுகளாக பத்திரப்பதிவு செய்து ஆக்கிரமிப்பு செய்ததாக தனியார் கல்குவாரி நிறுவனம் மீது விவசாயிகள் குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள். தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை கொடுத்தும் இதுவரை எங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குமுறும் விவசாயிகள், தனியார் கல்குவாரி நிறுவனத்திடம் இருந்து எங்களை நிலத்தை மீட்டு வாழ்வாதாரத்தை காக்க அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Written byபிரபாகர் B | Samayam Tamil 3 Jun 2023, 3:19 pm
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகாவிற்கு உட்பட்ட வலையபட்டி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி முழுவதும் விவசாயமே பிரதான தொழிலாக இருக்கிறது. வலையபட்டி கிராமத்தினர் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தலைமுறை தலைமுறையாக மானாவரி விவசாயம் செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil theni farmers issue
theni farmers issue


விளைநிலம் ஆக்கிரமிப்பு

இந்நிலையில் தங்களது நிலத்தை ஒட்டியுள்ள கேகே ப்ளூ மெட்டல் கல்குவாரி நிறுவனம் இது தங்களுடைய நிலம் என்று இதை நாங்கள் வாங்கி விட்டதாக கூறி இருக்கிறது. இதில் யாரும் விவசாயம் செய்ய கூடாது என்று தங்களை மிரட்டி கல்குவாரி நிறுவனம் வெளியேற சொல்வதாகவும் விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.

ஆட்சியரிடம் முறையிட்டும் பலனில்லை

இதுகுறித்து, தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை கொடுத்தும் இதுவரை எங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் நேற்று விவசாயம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளும் போது கல்குவாரி நிறுவன உரிமையாளர்கள் விவசாயிகளை மிரட்டியதாக தெரிகிறது.

அதுமட்டுமின்றி, விவசாய நிலம் அருகே தாங்கள் அமைத்த கூரைகளை இரவோடு இரவாக கல்குவாரி நிறுவனத்தினர் தீ வைத்து எரித்து விட்டதாகவும் விவசாயிகள் கண்ணீருடன் கூறினர். எனவே தனியார் கல்குவாரி நிறுவனத்திடம் இருந்து தங்கள் நிலத்தை மீட்டு எங்கள் வாழ்வாதாரத்தை காக்க அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம்

இந்த நிலையில், விளைநிலத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்குவாரி நிறுவனத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள், உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என கலக்கத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி