ஆப்நகரம்

குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்... ஆனா நடந்ததே வேற...

குழந்தைகள் 2 பேரும் பலியான நிலையில், தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Samayam Tamil 10 Jun 2020, 11:13 pm
சின்னமனூர் அருகே இரண்டு ஆண் குழந்தைகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்று உயிர்பிழைத்த தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Samayam Tamil பலியான 2 குழந்தைகள் மற்றும் தாய்


தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கன்னிசேர்வைபட்டி யைச் சேர்ந்தவர் பிரபு. இவர் சொந்தமாக சரக்கு லாரி வைத்துள்ளார். மேலும் இப்பகுதியில் விளையும் காய்கறிகள் மற்றும் திராட்சை போன்றவற்றை வெளியூர்களுக்கு கொண்டு சேர்க்கும் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் ஆனைமலையன்பட்டி யைச் சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தர்னீஸ் என்ற 7 வயது ஆண் குழந்தையும் லக்சன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளனர். தர்னீஸ் அவரது வீட்டின் அருகே உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார்.

பிரபு குடித்துவிட்டு வந்து நாள்தோறும் பவித்ராவிடம் தகராறு செய்து வந்ததாகவும் இதனால் பவித்ராவிற்கும், பிரபுவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பவித்ரா புகுந்த வீட்டில் இருக்கப் பிடிக்காமல் ஆனைமலையன்பட்டியில் உள்ள அவரது தாய் வீட்டிலேயே பெரும்பாலும் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் பிரபுவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாய்வீடு சென்ற பவித்ரா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் மறுபடியும் கணவன் வீட்டிற்கு வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று பிரபு லோடு ஏற்றிக்கொண்டு பாண்டிச்சேரி சென்ற நிலையில் வீட்டில் பவித்ரா மற்றும் அவரது மாமனார் கோபாலகிருஷ்ணன்,மாமியார் ராசாத்தி மற்றும் இரண்டு குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர்.

நேற்று இரவு பவித்ரா வீட்டிற்குள் இருந்த அறையில் படுத்திருந்த நிலையில் இரண்டு குழந்தைகளும் அவர்களது தாத்தா, பாட்டியுடன் ஹாலில் தூங்கிக் கொண்டிருந்தனர். இரவு பதினோரு மணியளவில் பாட்டியுடன் படுத்திருந்த 2 குழந்தைகளையும் எழுப்பிய பவித்ரா தன்னுடன் வந்து தனது அறைக்குள் தூங்குமாறு அழைத்துச் சென்றார்.

வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ காளன் காலமானார்..!


பின்னர் அவர் குளிர்பானத்தில் திராட்சை பழங்களுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை கலந்து வைத்து தர்னீஷ் மற்றும் லக்சன் ஆகிய இருவருக்கும் கொடுத்துள்ளார். அதன்பின் தானும் குளிர்பானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளார்.

பவித்ரா விஷம் குடித்த நிலையில் அதே ஊரில் குடியிருக்கும் தனது தாய்மாமா செந்தில் என்பவருக்கு போன் செய்து தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்ததாக தெரிவித்தார். இதனையடுத்து பவித்ராவின் வீட்டிற்கு சென்ற செந்தில் கதவைத் தட்டி எழுப்பி விஷயத்தைக் கூறிய பிறகுதான் பவித்ராவின் மாமனார் கோபாலகிருஷ்ணனுக்கும் மாமியார் ராசாத்திக்கும் விஷயம் தெரிந்தது.

பவித்ராவின் அறைக் கதவைத் தட்டியவுடன் பவித்ரா கதவைத் திறந்து வெளியே வந்தார். அவரது தாய்மாமா செந்தில் மற்றும் மாமனார்,மாமியார் உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் இருந்தனர். பவித்ரா விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த நிலையில் தான் குடித்த விஷத்தை வாந்தி எடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

பவித்ராவின் மாமியார் ராசாத்தி மற்றும் மாமனார் கோபாலகிருஷ்ணனின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்து விஷம் குடித்த நிலையில் இருந்த பவித்ராவை சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக சின்னமனூர் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் காவல் துறையினர் விரைந்து வந்து உயிரிழந்த நிலையில் இருந்த இரண்டு சிறுவர்களின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவித்ராவும் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வெளியூர் சென்றிருந்த பிரபுவுக்கு தகவல் அளிக்கப்பட்டது அவர் உடனடியாக கிளம்பி சின்னமனூர் வந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பிரபு மற்றும் அவரது உறவினர்களிடம் காவல்துறையினர் விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் சிகிச்சை பெற்றுவரும் பவித்ராவிடம் வாக்குமூலம் பெற காவல்துறையினர் முயற்சித்து வந்தனர். எனினும், இறந்த குழந்தைகளின் உடற்கூறு ஆய்வு முடிவுகள் வந்த பிறகே மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், என்ன நடந்தது என்று அப்பொழுதுதான் உறுதியாக கூறமுடியும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இப்போது தாய் மீது கொலை வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. தந்தை மீது வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல், கொலைக்கு தூண்டுதலாக இருந்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தந்தை கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தாய் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.


பெற்ற குழந்தைகளுக்கு தாயே விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி