ஆப்நகரம்

உ.பி.யில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்: நடவடிக்கை எப்போது?

உத்தரபிரதேசத்தில் சிக்கித் தவிக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை மீட்டுவர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 May 2020, 11:22 am
உத்திரப்பிரதேச மாநிலம் ஈடாக் மாவட்டத்தில் அடுத்த வேளை உணவின்றி தவிக்கும் தேனி மாவட்ட மக்களை மீட்டு தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க தமிழக அரசிற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தேனி மாவட்டக்குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil theni migrant workers


கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு, தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கூறியுள்ளது. இந்தியாவில் இதுபோன்று வாழும் மக்களை மீட்டு அழைத்து வர மாநில அரசு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை என்ன செய்யப் போகிறது கொரோனா?

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், வருசநாடு தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 30 பேர் குடும்பத்துடன் வேலை தேடி கடந்த சில மாதங்களுக்கு முன் உத்திரப்பிரதேச மாநிலம் ஈடாக் மாவட்டத்திற்குச் சென்றுள்ளனர். ஈடாக் மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஹோட்டல் வேலை செய்து பிழைத்து வந்த அவர்கள், கொரோனா பாதிப்பால் நாடெங்கும் 144 தடை ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலைகளை இழந்து, வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். அடுத்த வேலை உணவுக்கு கூட வழியின்றி தவிக்கும் அவர்கள், சொந்த ஊருக்கு திரும்ப நினைத்தாலும் அது சாத்தியமில்லாத சூழல் இருக்கிறது. இந்நிலையில் அந்த மாநில அரசும் அம்மக்களுக்கு எந்தவித கொரோனா கால நிவாரணமும் வழங்காமல், மாற்றான் போக்கு மனநிலையில் அணுகி வருவதாக கூறப்படுகிறது.

“வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை மீட்பதற்காக தமிழக அரசு அறிவித்த இணையதளத்தில் அவர்கள் பதிவு செயதும், அதேபோல உத்திரப்பிரதேச மாநில அரசின் இணைய தளத்திலும் பதிவு செய்தும் அவர்களை அழைத்து வர, புலம்பெயர் தொழிலாளர்களை மீட்டு சொந்த மாநிலத்திற்கு அனுப்ப எந்த மாநில அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை.

உணவகங்கள் வைத்த கோரிக்கை: செவி சாய்க்குமா அரசு?

இந்நிலையில் 30-க்கும் மேற்பட்ட மக்களும் தங்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லும்படி திக்குத் தெரியாமல் தமிழக அரசை வேண்டியுள்ளனர். வயிற்றுப் பிழைப்புக்காக தேனி மாவட்டத்தில் இருந்து சுமார் 2500 கி.மீ நெடுந்தொலைவில் இருக்கும் உத்திரப்பிரதேச மாநிலம் ஈடாக் மாவட்டத்திற்கு பிழைப்பைத் தேடி சென்ற புலம்பெயர் தொழிலாளர்களை ரயில் மற்றும் பேருந்து கட்டணம் ஏதுமின்றி போதிய உணவு வழங்கி பாதுகாப்பு ஏற்பாட்டோடு சொந்த மாநிலத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக துணை முதல்வர் அவர்களையும், தேனி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களையும், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களையும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தேனி மாவட்டக்குழு சார்பில் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளர் தமிழ் பெருமாள் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி