ஆப்நகரம்

சாத்தான்குளம் கஸ்டடி மரணம்: யாரெல்லாம் குற்றவாளி? சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

போலீசார் கஸ்டடியில் தந்தை, மகன் கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Samayam Tamil 26 Sep 2020, 4:39 pm
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ். இவர்கள் செல்போன் கடை நடத்தி வந்த நிலையில், ஊரடங்கு நாட்களில் கூடுதல் நேரம் கடை திறந்து வைக்கப்பட்டிருந்ததாக கூறி விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். இவர்கள் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இந்த விவகாரத்தை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. அதில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் கஸ்டடியில் சித்ரவதை செய்யப்பட்டது தெரியவந்தது.
Samayam Tamil Sathankulam Murder


இதன் தொடர்ச்சியாகவே இருவரும் உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முதல்நிலை காவலர் முத்துராஜா, சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் சாமிதுரை, முதல் நிலைக் காவலர்கள் வெயில்முத்து, செல்லதுரை, தாமஸ் பிராங்க்ளின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில் சிபிஐ வசம் கைமாறியது. இதற்கிடையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் உயிரிழந்தார். மேலும் பல சிபிஐ அதிகாரிகளுக்கும் வைரஸ் தொற்று உறுதியானது.

சாத்தான்குளம் கஸ்டடி மரணம்: கைதான எஸ்.எஸ்.ஐ பால்துரை உயிரைப் பறித்த கொரோனா!

இதனால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. நிலைமை சீரடைந்து விசாரணை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

அடுத்த செய்தி