ஆப்நகரம்

விஷ வாயு தாக்கி பலியான நான்கு பேர்: முதல்வர் அறிவித்த நிவாரணம்!

விஷ வாயு தாக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா பத்து லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Jul 2020, 1:35 pm
கழிவுநீர்த் தொட்டியில் போதிய பாதுகாப்பில்லாமல் இறக்கிவிடப்பட்டு அப்பாவித் தொழிலாளர்கள் மரணமடையும் சம்பவங்கள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Samayam Tamil poison gas


நேற்று (ஜுன் 2) தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே செக்காரக் குடி கிராமத்தில் சோமசுந்தரம் என்பவரது வீட்டில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்ய முயன்ற போது நான்கு பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம், செக்காரக்குடி கிராமத்தில் தனியார் ஒருவருடைய வீட்டில் 2.7.2020 அன்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்க முயன்ற போது திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த திரு.பாண்டி, திரு.இசக்கிராஜ், திரு. பாலகிருஷ்ணன் மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த திரு.தினேஷ் ஆகிய நான்கு நபர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இருபதாயிரம் ரூபாய்க்கு இரட்டை கொலையா? காவல் நிலையத்தில் நடந்த பேரம்!

இச் சம்பவத்தில் உயிரிழந்த திரு.பாண்டி, திரு.இசக்கிராஜ், திரு.பாலகிருஷ்ணன் மற்றும் திரு. தினேஷ் ஆகிய நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி