ஆப்நகரம்

ஆன்லைன் ரம்மி; அண்ணன் கொலையில் மேலும் திருப்பம்.. தூத்துக்குடி பரபரப்பு

ஆன்லைன் ரம்மி விளையாடி பல லட்சம் இழந்த அண்ணனை திட்டமிட்டு அழைத்து சென்று தீர்த்துக்கட்டிய தம்பி

Samayam Tamil 2 Apr 2023, 7:02 pm
ஆன்லைன் ரம்மியால் பணமிழந்தவர்கள் தற்கொலைக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஆன்லைன் ரம்மியால் குடும்பத்தை பொருளாதார நெருக்கடிக்கு கொண்டு வந்த அண்ணனை தம்பியே அடித்து கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் நடந்தேறியுள்ளது.
Samayam Tamil thoothukudi
இடது, கொலை செய்யப்பட்டவர் - வலது கொலை செய்தவர்


என்ன நடந்தது?

பண்டாரம்பட்டி மேற்கு சிப்காட் வளாக காட்டுப் பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிப்காட் காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று அங்கு இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் சில்லாநத்தத்தைச் சார்ந்த சொக்கலிங்கம் மகன் நல்லதம்பி என்பது தெரிய வந்தது. இவர் ஆன்லைன் சூதாட்டம் விளையாடி ரூ 40 லட்சம் வரை இழந்ததால் அண்ணன் தம்பி இருவருக்கும் சொந்தமான லாரியை விற்றும் சூதாட்டம் நடத்தி விளையாடியுள்ளார் நல்லதம்பி. மேலும் பிற லாரி நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய பணத்தையும் சரியாக கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

தம்பியிடம் கடன்

மேலும் தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் லாரி செட் நடத்தி வரும் இறந்தவரின் தம்பி முத்துராஜ் என்பவரிடம் ரூ.3 லட்சம் கடனாக பெற்று அவருக்கு திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார் இதில் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து முத்துராஜ் தனது அண்ணன் நல்லதம்பியை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கையில் கொண்டு வந்த கம்பியால் அவரது தலையில் கொடூரமாக தாக்கி கொலை செய்து விட்டு தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

சிப்காட் போலீசார் அவரை கைது செய்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்குவதில் அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் தம்பி அண்ணனை கொலை செய்திருக்கும் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி